பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குலமும் கோவும்

97

அதியர்

தமிழ் நாட்டில் வாழ்ந்த மற்றொரு குலத்தோர் அதியர் எனப்படுவார்.அன்னார் தலைவன் அதியன் என்றும், அதியமான் என்றும்,அதியர் கோமான் என்றும் வழங்கப் பெற்றான்.ஒரு காலத்தில் அதியமான் ஆட்சி தமிழ்நாட்டில் பெரும் பகுதியில் நிலவியிருந்ததாகத் தெரிகின்றது.அக்குலத்தைச் சார்ந்த அதியர் தலைவருள் சிறந்தவன் அதியமான்.நெடுமான் அஞ்சியாவான்.அவனது நாட்டின் தலைநகர் தகடூர் என்று தமிழ் இலக்கியம் கூறும்.அவ்வூருக்கு ஐந்து மைல் தூரத்தில் அதமன் கோட்டை என்னும் பெயருடைய ஊர் அமைந்திருக்கின்றது. முன்னாளில் அங்கிருந்த கோட்டையின் அடையாளங்கள் இன்றும் காணப்படும்.அக்கோட்டை அதியமானால் கட்டப்பட்டது போலும்! அதியமான் கோட்டை என்பது அதமன் கோட்டையென மருவியிருத்தல் கூடும். இன்னும், சேலம் நாட்டிலுள்ள அதிகப்பாடியும், செங்கற் பட்டிலுள்ள அதிகமான் நல்லூரும் அவ்வரசனோடு தொடர்புடையனவாகத் தோன்றுகின்றன.

ஆவியர்

ஆவியர் குலம் மற்றொரு தமிழ்க் குலம். அக் குலத்தார் பழனி மலைப் பகுதிகளில் வாழ்ந்து வந்தார்கள்.அவர் தலைவன் ஆவியர் கோமான் என்று பெயர் பெற்றான். கடையெழு வள்ளல்களில் ஆவியர் ஒருவனாகிய பேகன் என்பவன் அக்குலத் தலைவருள் ஒருவன். அவனை வையாவிக் கோப்பெரும் பேகன் என்று சங்க இலக்கியம் குறிக்கின்றது. அம்மன்னன் அரசாண்ட ஊர் வைகாவூர் என்றும், வையாபுரி என்றும் வழங்கிற்று.