பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குலமும் கோவும்

101

பாண்டி நாட்டு மன்னர்

பூதப்பாண்டியன்

பழந்தமிழ் நூல்களில் பூதப்பாண்டியன் என்ற பெயருடைய மன்னன் பெருமை பேசப்பட்டுள்ளது. ஒல்லையூரில் மாற்றாரை வென்று புகழ் பெற்ற அம்மன்னனை ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் - என்று நல்லிசைப் புலவர்கள் பாராட்டினார்கள்: நாஞ்சில் நாடு என்னும் தென் திருவாங்கூர் தேசத்திலுள்ள பூதப்பாண்டி என்ற ஊர் அவன் பெயரால் அமைந்ததென்று கருதலாகும்.

அழகிய பாண்டியன்

பூதப் பாண்டியனுக்குப் பின்னே வந்த அழகிய பாண்டியன் பண்டைக் காலத்துப் பாண்டி மன்னருள் மிகச் சிறந்தவன். பொதியமலைச் சிற்றரசனாகிய அழகிய ஆய் என்பவனை வென்று மேம்பட்ட அப்பாண்டியன் தன் வெற்றிச் சிறப்பு விளங்குதற் பொருட்டு அம்மலையடி வாரத்திலுள்ள ஓர் ஊருக்கு அழகிய பாண்டியபுரம் என்று பெயரிட்டான் என்பர்.

சேந்தன்

ஏழாம் நூற்றாண்டின் முற்பகுதியில் மதுரை மாநகரில் அரசாண்டவன் சேந்தன் என்னும் செழியன். அவன் சிறந்த வீரனாகவும், செங்கோல் வேந்தனாகவும் விளங்கினான் என்பது சிலைத் தடக்கைச் செழியன் என்றும், செங்கோல் வேந்தன் என்றும் வேள்விக் குடிச் செப்பேடுகள் கூறுதலால் அறியப்படும். சேந்தமங்கலம் என்ற ஊர் பாண்டி நாட்டில் உண்டு.