பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

107

குலமும் கோவும்

பெயரால் அம்மன்னன் பெரியதோர் ஏரியும் வெட்டுவித்தான்.விசுவநாதப் பேரேரி என்று பெயர் பெற்ற அவ்வேரி, விசுவநாதப்பேரி என இன்றும் வழங்கக் காணலாம். இன்னும் விந்தனுர் முதலாய ஐந்து ஊர்களில் அவ்வரசன் அகரங்கள் அமைத்து அந்தணரைப் பேணிய செய்தி கல்வெட்டுகளால் அறியப்படும். அவ் வகரங்கள் ஒன்று மேலகரம் என்னும் பெயரோடு இன்றும் தென்காசிக்கு அருகே நின்று நிலவுகின்றது. சிவபக்திச் செல்வமும், செந்தமிழ்ப் புலமையும் வாய்ந்த அம் மன்னன் தென்காசித் திருப்பணியைக் குறித்துப் பரிவுடன் பாடிய பாட்டு அன்பர் உள்ளத்தை உருக்குதாகும்.

கிருஷ்ணப்ப நாயக்கன்

பதினாறாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பாண்டி நாடு நாயக்கரது ஆட்சியில் அமைவதாயிற்று. விஜயநகரப் பேரரசர்களின் சார்பாக, கர்த்தாக்கள் என்னும் பெயரோடு நாயக்கர், மதுரையில் ஆட்சி புரிவாராயினர். அவர்களுள் ஒருவன் கிருஷ்ணப்ப நாயக்கன்.பாளையங் கோட்டையின் அருகேயுள்ள கிருஷ்ணாபுரம் அவன் பெயரைத் தாங்கி நிற்கின்றது. அங்குள்ள திருமால் கோவிலில் அமைந்துள்ள சிற்பத்தின் சீமை இன்றும் கலைவாணர்களால் வியந்து பாராட்டப்படுவதாகும்.

திருமலை நாயக்கன்

நாயக்கர் மரபைச் சேர்ந்த திருமலை நாயக்கன் பெயரைத் தென்னாடு நன்கு அறியும். மதுரை மாநகரை அலங்கரிக்கின்ற கட்டடங்களில் மிகச் சிறந்தது திருமலை நாயக்கன் மாளிகையேயாகும். அவ்வரசன் ஸ்ரீவில்லி புத்தூரிலும்