பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குலமும் கோவும்

109

புரிந்த போது வீரராகவர் அவருடைய பிரதிநிதியாகத் தென்னாட்டில் விளங்கினார் என்பது சாசனத்தால் அறியப்படும்.

திருவேங்கட நாதன்

பதினேழாம் நூற்றாண்டில் பிற்பகுதியில் மாதைத் திரு வேங்கடநாதன் என்பவர் நாயக்கரது பிரதிநிதியாக நெல்லை நாட்டின் நிர்வாகத்தை நடத்தி வந்தார். அவர் கலைவாணரைப் பெரிதும் ஆதரித்தவர். இலக்கண விளக்கம் என்னும் நூலின் ஆசிரியர் திருவேங்கட நாதன் கொடைத் திறத்தினைப் நாவாரப் புகழந்துளளார்.குடிகளின் நன்மையைக் கண்ணும் கருத்துமாய்ப் பேணிய அந் நல்லார் பெயர் திருநெல்வேலிக்குத் தென் மேற்கிலுள்ள திருவேங்கட நாதபுரம் என்னும் ஊரால் விளங்குகின்றது.

நாயக்கர்

விஜயநகரப் பெரு மன்னரது ஆட்சி நிலைகுலைந்த பின்பு ஆந்திர நாட்டில் அச்சமும் குழப்பமும் ஏற்பட்டன. ஆந்திரத் தலைவர் பலர் தம் பரிவாரங்களோடு தமிழ் நாட்டிலே குடியேறி வாழத் தலைப்பட்டார்கள். இங்ஙனம் தென்னாட்டிற் போந்த வடுகத் தலைவர்களில் ஒருவர் எட்டப்ப நாயக்கர். அவர் பெயரால் அமைந்த ஊர் எட்டயபுரம் ஆகும். இவ்வண்ணமே கொடைக்கானல் மலைக்குப் போகும் வழியிலுள்ள அம்மை நாயக்கனூர் நாயக்கன் பெயரைக் கொண்டுள்ளது. இன்னும் போடி நாயக்கனூர் முதலிய ஊர்களின் பெயரிலும் தென்னாட்டில் வந்து சேர்ந்த வடுகத் தலைவரின் பெயர் விளங்கக் காணலாம்.