பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

126

ஊரும் பேரும்


அறியப்படும். அங்குள்ள குலசேகர ஈச்சுரம் என்னும் சிவாலயத்திற்கும், அதன் அருகே சோழமாதேவி அமைந்த திருமடத்திற்கும் சோழ மன்னர் அளித்த நன்கொடை கல்வெட்டுகளால் விளங்குகின்றது.

திருச்சி நாட்டில் உத்தம சேரிக்கு அண்மையில் சோழமாதேவியின் பெயரால் அமைந்த சதுர்வேதி மங்கலம் ஒன்றுள்ளது.அது முன்னாளில் விளா நாட்டைச் சேர்ந்த பிரமதேயமாக விளங்கிற்றென்று சாசனம் கூறும்.இப்பொழுது அவ்வூர் சோழமாதேவி என்றே வழங்குகின்றது.

இராஜேந்திர சோழன்

இராஜராஜனுக்குப் பின்பு அரசுரிமை பெற்றான் அவன் மைந்தனாகிய இராஜேந்திரன், தஞ்சைச் சோழர் என்று சொல்லப்படும் இடைக்காலத்துப் பெருஞ் சோழ மன்னர் பெருமையெல்லாம் தன் பெருமையாக்கிக் கொண்டு தலைசிறந்து விளங்கியவன் இவனே. இவன் காலத்தில் சோழர் பேரரசு உச்சநிலை அடைந்திருந்தது. இவன் புகழ், பாரத நாட்டின் எல்லை கடந்து, சிங்களம், கடாரம், மாநக்கவாரம் முதலிய பன்னாடுகளிலும் பரவி நின்றது.

விருதுப்பெயர்கள்

இம்மன்னன் தான் பெற்ற வெற்றியின் அறிகுறி யாகச் சில பட்டப் பெயர்களை மேற் கொண்டான்.அவற்றுள் மிகச் சிறந்தவையான முடி கொண்டான். கங்கை