பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

135

குலமும் கோவும்


அங்கு அரிதாசர் என்று பெயர் பெற்ற பரம வைணவர் ஒருவர் இருந்தார். அவர் கனவிலே பெருமாள் அறிவித்த வண்ணம் கிருஷ்ண தேவராயன் அவ்வூரிலே திருமால் கோயில் ஒன்று கட்டுவித்தான்.அது வேத நாராயணன் கோயிலென இன்றும் விளங்குகின்றது.அக் கோயிலுக்கு வேந்தன் அளித்த நிவந்தங்கள் கோபுரத்திற் குறிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்று ஆரிய வேதமும், திராவிட வேதமும் ஓதுவார்க்கு ஏற்படுத்திய நன்கொடை யாகும். கோயிற் காரியங்களை எல்லாம் மன்னன் அரிதாசரிடம் ஒப்புவித்தான்; பெருமாள் அருளைப் பெறுவதற்குக் காரணமாக இருந்த அரகண்ட புரத்தை என்றும் நினைத்து இன்புறும் வண்ணம் நாகலாம்மாள் என்னும் தன் தாயின் பெயரை அவ்வூருக்கு இட்டான். அன்று தொட்டு அரகண்டபுரம் என்னும் பழம்பெயர் மாறி நாகலாபுரம் என்ற புதுப் பெயர் வழங்கலாயிற்று.

பொன்னேரி வட்டத்தில் உள்ள நரசிங்கபுரம் என்னும் ஊரின் வரலாறும் உணரத்தக்கதாகும். ஆதியில் கூவம் என்பது அதன் பெயர். குன்றுார் நாட்டுக் கூவம் என்பது சாசன வாசகம். விஜய நகர மன்னனாகிய அச்சுதராயன் அங்கு நரசிங்கப் பெருமாளுக்கு ஒரு கோயில் கட்டுவித்தான்; அவ்வளவில் அமையாது நரச நாயக்கன் என்னும் தன் தந்தையின் பெயர் விளங்குமாறு நரச நாயகபுரம் என்று அவ்வூருக்குப் பெயரிட்டான். ஆயினும்