பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குலமும் கோவும்

143


உரைநடை நூலும் எழுதினார் முனிவர். வேதியர்புரம் என்ற ஊர் தஞ்சாவூருக்குத் தென்கிழக்கே எட்டு மைல் துரத்தில் உள்ளது. கிருஸ்தவர்கள் வாழும் ஊராகவே அஃது இன்றும் விளங்குகின்றது.

சான்றோரும் ஊர்ப்பெயரும்

தெய்வ மணங் கமழும் தமிழகத்தில் ஆன்றோர் பலர் தோன்றினர்; ஆண்டவனை அடைதற்குரிய நெறி காட்டினர்; அருட்பாடல்களால் அன்பை வளர்த்தனர். இத்தகைய தெய்வப் பணி செய்த பெரியாரை நாயனார் என்றும், ஆழ்வார் என்றும் தமிழகம் போற்றி வருகின்றது. அவர்கள் பிறந்த ஊர்களும், பாடிய பதிகளும் தனிப் பெருமையுற்று விளங்குகின்றன.

நாவீறுடையார்

நெல்லை நாட்டில் நாவீறுடையபுரம் என்ற சிற்றூர் ஒன்று உள்ளது. நாவீறு என்பது சொல்லின் செல்வம். அச்செல்வத்தைச் சிறப்பாகப் பெற்ற நம்மாழ்வாரை நாவீறுடையார் என்று வைணவ உலகம் போற்றுகின்றது. அவர் பெயர் கொண்டு விளங்குவது நாவீறுடையபுரம்.

சிறுத்தொண்டர்

திருத்தொண்டர் புராணத்தில் பாராட்டப்பெறுகின்ற சிவனடியாருள் ஒருவர் சிறுத்தொண்டர் என்னும் பெயருடையார். அவர் பல்லவ மன்னரிடம் படைத் தலைவராய்ப் பணி செய்தவர். பகைவரை முருக்கி வெல்லும் வீரம் வாய்ந்த அப்பெரியார் பரமனடியாரைக் கண்ட பொழுது பணிந்து தாழ்ந்து துவண்டு நின்ற