பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

148

ஊரூம் பேரும்


குரிய கிள்ளி யென்ற பெயர் தாங்கி நிலவும் பதியில் வேளாளர் குலத்திற் பிறந்த புலவர் கிள்ளி மங்கலங்கிழார் என்று குறிக்கப்பெற்றார். அவ்வூரின் பெயர் இப்பொழுது கிண்ணி மங்கலம் என மருவி வழங்குகின்றது.

பிசிர் ஆந்தையார்

தமிழகத்தில் தலை சிறந்த நட்புக்கு எடுத்துக்காட்டாக அமைந்தவர்கள் கோப்பெருஞ் சோழனும் பிசிராந்தையாரும். அவ்விருவரும் வேறு வேறு நாட்டினராயினும்,வேறு வேறு நிலையின ராயினும், ஒத்த உணர்ச்சியுடையராய் இருந்த மையால் உயரிய நண்பர் ஆயினர் என்று பரிமேலழகர் கூறிப் போந்தார். பிசிர் என்ற ஊரைச் சேர்ந்த ஆந்தையார் பிசிராந்தையார் என்று பெயர் பெற்றார். அவ்வூர் பாண்டி நாட்டிலுள்ள தென்பது,

“தென்னம் பொருப்பன் நன்னாட் டுள்ளும் பிசிரோன் என்ப”

என்று கோப்பெருஞ் சோழன் கூறுதலால் அறியப்படும். இப்பொழுது அவ்வூர் இராமநாதபுரம் நாட்டில் பிசிர்க்குடி யென்று வழங்குகின்ற தென்பர்.

மோசியார்

மோசி என்னும் சொல்லாலும், அதோடு தொடர்ந்த பெயராலும் குறிக்கப்படும் புலவர்கள் பழந்தொகை நூல்களிற் சிலர் உண்டு. புறநானூற்றில் ஆய் அண்டிரன் என்ற வள்ளலைப் பன்னிரு பாட்டால் புகழ்ந்து பாடியவர் முட மோசியார் ஆவர். இவரை மோசி என்றும் அக்காலத்