பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குலமும் கோவும்

149


தறிஞர் அழைத்ததாகத் தெரிகின்றது. இன்னும் மோசி கீரனார் இயற்றிய பாடல்கள் அகப் பாட்டிலும், புறப்பாட்டிலும் காணப்படும்.தகடூர் எறிந்த பெருஞ் சேரமானின் முரசு கட்டிலில் அறியாது படுத்துறங்கி,அவனால் கவரி வீசப்பெற்ற புலவர் இவரே.இன்னும் மோசி கொற்றனார்,மோசி சாத்தனார்,மோசி கண்ணத்தனார் என்னும் புலவர்களும் முற்காலத்தில் இருந்தனர். அன்னார் பெயர்களில் அமைந்த மோசி என்னும் சொல் மோசுகுடி என்ற ஊர்ப் பெயரில் விளங்குகின்றது. இப்பெயர் பெற்ற ஊர் இராமநாதபுரத்துச் சிவகங்கை வட்டத்தில் உள்ளது.

அழிசியார்

அழிசி என்னும் பெயருடைய மூவர் சங்க காலத்தில் இருந்தனர். அன்னவருள் ஒருவர் நல்லழிசியார். பரிபாடலில் இரு பாடல்கள் அவருடையன. கொல்லன் அழிசி என்பவர் இயற்றிய செய்யுட்கள் நான்கு குறுந்தொகையிற் சேர்ந்துள்ளன. அழிசி நச்சாத்தனார் என்பது இன்னொரு புலவர் பெயர். ஆதன் அழிசி என்னும் தலைவன் பூதப் பாண்டியனுடைய நண்பர்களுள் ஒருவன் என்பது புறப்பாட்டால் விளங்குகின்றது. இவர்தம் பெயரை நினைவூட்டும் அழிசிகுடி என்னும் ஊர் தென் ஆர்க்காட்டுச் சிதம்பர வட்டத்தில் உண்டு.

மிளையார்

முன்னாளில் மிளை யென்ற ஊரில் வாழ்ந்த ஒரு தலைவன் பெயரும், இருபுலவர் பெயரும் குறுந்தொகை யால் விளங்கும். மிளை வேள் தித்தன் என்று அந்நூல் கூறுதலால், அத் தலைவனுடைய ஊரும் குலமும் பெயரும் அறியப்படுகின்றன. இன்னும் மிளைக்கந்தன், மிளைப்பெருங்கந்தன் என்னும் புலவர்கள்