பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

154

ஊரும் பேரும்


வாழ்வதற்காக அக்குறிச்சியிலுள்ள மனைகளையும் நிலங்களையும் விலை கொடுத்து வாங்கினர் கிருஸ்தவ சங்கத்தார். அக்கிரயத் தொகையை ஜெர்மானிய தேசத்தைச் சேர்ந்த டோனா என்னும் பெருஞ் செல்வர் நன்கொடையாக அளித்தார். நன்றி மறவாத நெல்லை நாட்டுக் கிருஸ்தவர் அவர் பெயரை அவ்வூருக்கு அமைத்து டோனாவூர் என வழங்கலாயினர்.

சாயர்

நெல்லை நாட்டிலுள்ள மற்றொரு சிற்றூர் சாயர்புரம் என்று பெயர் பெற்றுள்ளது. அங்கும் கிருஸ்தவர்களே பெருந்தொகையினராக வசிக்கின்றார்கள்.அவ்வூரில் குடியிருப்புக் கேற்ற மனையிடங்களை விலை கொடுத்து வாங்கியவர் சாயர் என்னும் போர்ச்சுகீசிய வணிகர். கிறிஸ்தவ சங்கத்தார் நெல்லை நாட்டிற் செய்த பெரும் பணிகளை அவர் மனமுவந்து ஆதரித்தார். அவர் வழங்கிய பொருளால் எழுந்த ஊர் சாயர்புரம் என்று பெயர் பெறுவதாயிற்று.

காசாமேசர்

திருக்குற்றால மலைக்கு அருகே காசிமேசபுரம் என்னும் சிற்றூர் உள்ளது. அவ்வூர்ப் பெயரில் ஆங்கில நாட்டார் ஒருவர் பெயரைக் காணலாம். கம்பெனியார் காலத்தில் காசா மேஜர் என்ற ஆங்கில நாட்டு வர்த்தகர் குற்றால மலையின் அடிவாரத்தில் சில ஆண்டுகள் தங்கியிருந்தார். தெற்கு மலை முதலிய இடங்களில் தோட்டப் பயிரிடும் பணியை அவர் மேற்கொண்டார். அவர் வாசம் செய்த இடம் காசாமேசர் புரம் என்று பெயர் பெற்றது. அதுவே பிற்காலத்தில் காசிமேசபுரமாயிற்று.