பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

166

ஊரும் பேரும்


சிறந்த நம்மாழ்வார் புளியமரத்தின் கீழ் அமர்ந்து புனிதராயினார்.5

இங்ஙனம் சிறந்து விளங்கிய மரங்களும் சோலைகளும் இறைவனை வழிபடுதற்குரிய கோயில்களாயின.திருக்குற்றாலத்தில் உள்ள குறும்பலா மரத்தைத் திருஞான சம்பந்தர் நறுந்தமிழாற் பாடியுள்ளார்.6

நறுமணம் கமழும் செடி கொடிகள் செழித்தோங்கி வளர்ந்த சூழல்களிலும் பண்டைத் தமிழர் ஆண்டவன் அருள் விளங்கக் கண்டார்கள். தேவாரத்தில் கொகுடிக் கோயில் என்னும் பெயருடைய ஆலயமொன்று பாடல் பெற்றுள்ளது. கொகுடி என்பது ஒருவகை முல்லைக் கொடி. எனவே, நல்மணம் கமழும் முல்லையின் அடியில் அமைந்த திருக்கோயில் கொகுடிக் கோயில் ஆயிற்று. இன்னும், தேவார வைப்புத் தலங்களுள் ஒன்று ஞாழற் கோயில் என்று குறிக்கப் படுகின்றது. ஞாழல் என்பது கொன்றையின் ஒரு வகை. கொன்றையங் கோயிலே ஞாழற் கோயில் என்று பெயர் பெற்றது.

காவும் காடும்

நிழல் அமைந்த சோலைகளும், நெடிய காடுகளும், இனிய பொழில்களும் வனங்களும் பாடல் பெற்ற பழம் பதிகளாகத் தமிழ் நாட்டில் விளங்கக் காவும் காடும் காணலாம். அவற்றுள் சில தேவாரப் பாட்டிலே காணப்படுகின்றன.

காவிரிக் கரையில் உள்ளதொரு பெருஞ் சோலையிற் காட்சியளித்த ஈசனை ஒரு வெள்ளானை நாள்தோறும் நன்னீராட்டி, நறுமலர் அணிந்து வழிபட்டமையால்