பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

178

ஊரும் பேரும்


கேரளாந்தகன் என்பது அம்மன்னனுக்குரிய விருதுப் பெயராதலால் அவன் ஆதரவு பெற்ற பதிகளுள் அத்தியும் ஒன்றென்று தோற்றுகின்றது. அப்பெயர் அதன் மறு பெயராய் ஏறக்குறைய ஐந்நூறு ஆண்டுகளுக்கு மேலாக வழங்கிய தன்மை சாசனங்களால் விளங்கும்.பின்பு விஜய நகரப் பெருவேந்தனாகிய கிருஷ்ண தேவராயன் காலத்தில் கிருஷ்ண ராயபுரம் என்னும் பெயர் அத்திக்கு அமைந்தது.3 இங்ஙனம் பல படியாகப் பெரு மன்னர் ஆதரவுக்குரியதாக விளங்கிய அத்தியே திருஞான சம்பந்தர் குறித்த ஊராக இருத்தல் கூடும்.

திருமுதுகுன்றம்

இன்னும், ஈசன் வீற்றிருக்கும் மலைகளுள் ஒன்றாகப் பேசப் பெற்றுள்ள முதுகுன்றம், மணிமுத்தாற்றின் மருங்கே அமைந்துள்ளது. “முத்தாறு வலஞ் செய்யும் முதுகுன்றம்” என்று திருஞானசம்பந்தர் புகழ்ந்துரைத்த தலம் அதுவே. பண்டைக்காலத்தில் அவ்வூரில் இருந்ததாகக் கூறப்படுகின்ற பழமலை இன்று காணப்பட வில்லை.எனினும்,அப்பதியைக் குறிக்கும் முதுகுன்றம், பழமலை முதலிய தமிழ்ப் பெயர்களும், விருத்தாசலம் என்னும் வடமொழிப் பெயரும் முன்னாளில் இருந்து மறைந்த குன்றத்தைக் குறிக்கும்!

கொடுங்குன்றம்

பாண்டி நாட்டைச் சேர்ந்தது கொடுங்குன்றம். அதனைப் பெருநகர் என்றும் திருநகர் என்றும் திருஞான சம்பந்தர் பாடியிருத்தலால் அந்நாளில் அது சாலப் பெருமை பெற்றிருந்ததாகத் தோற்றுகின்றது. தமிழ் நாட்டில் அழியாப்