பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

184

ஊரும் பேரும்


மலைக்கு இணையாகக் கண்டனர் தமிழ்ப் புலவர். “பொற்கோட்டு இமயமும் பொதிய மும் போன்று” என்று வாழ்த்தினார் ஒரு புலவர்.20 தமிழ் முனிவர் என்று புகழப்படுகின்ற அகத்தியர் வாழும் அம் மலையைத் தமிழகம் முழுவதும் தொழுவதாயிற்று.

“திங்கள்முடி சூடும்மலை தென்றல்விளை யாடுமலை
தங்குபுயல் குழுமலை தமிழ்முனிவன் வாழுமலை”

என்று புகழ்ந்து மகிழ்ந்தாள் அம்மலைக் குறவஞ்சி.21 இத்தகைய மலையைத் திருநாவுக்கரசரும் தேவாரத்திற் குறித்துள்ளார்.

“பொய்த்தார் புரமூன் றெரித்தானைப்
பொதியில் மேய புராணனை"

என்னும் திருவாக்கால் திரிபுர மெரித்த பழம் பொருளாகிய பரமசிவன் பொதிய மலையையும் கோயிலாகக் கொண்டவன் என்பது விளங்கும். இப் பொதிய மலையின் அடிவாரத்தில், பொருநையாறு சவியுறத் தெளிந்து செல்லும் துறையில், பாபநாசம் என்னும் தலம் அமைந்திருக்கின்றது22.

குடுமியான் மலை

புதுக்கோட்டை நாட்டில் குடுமியா மலை என்னும் மலையொன்று உண்டு.அம்மலை திருநலக்குன்று23 என்று சாசனங்களிற் குறிக்கப்பட்டுள்ளது. அங்குத் திருமேற்றளி முதலாய சிவாலயங்கள் உள்ளன. குன்றின் சிகரத்தைக் குடுமி என்னும் சொல் உணர்த்துவதாகும்.எனவே,குடுமியான் என்று அக்