பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

192 ஊரும் பேரும்


சுந்தர பாண்டியன் முதலாய பண்டைத் தமிழரசர் அதற்கு நிவந்தம் விட்டுள்ளார்கள்.8 எனவே, வட ஆர்க்காட்டிலுள்ள வளர்புரமே பழைய வளைகுளம் என்பது தெளிவாகும்.

இடைக்குளம்

முற்காலத்தில் இடைக்குளம் என வழங்கிய ஊர் இப்பொழுது மருத்துவக்குடி என்னும் பெயர் பெற்றுள்ளது. தஞ்சை நாட்டுக் கும்பகோண வட்டத்திலுள்ள மருத்துவக்குடிச் சிவன் கோயிலிற் கண்ட சாசனம் திரு இடைக் குளமுடையார் என்று அங்கு எழுந்தருளிய ஈசனைக் குறித்தலால், பழைய இடைக்குளமே மருத்துவக் குடியாயிற்று என்பது இனிது விளங்கும்.9

திருமுக்குளம்

இன்னும், ஈசனார் அருள் பெற்ற திருக் குளங்களில் ஒன்று திருவெண்காட்டிலுள்ள முக்குளம் ஆகும். திருஞான சம்பந்தர் அங்கு எழுந்தருளிய போது,

“முப்புரம் செற்றார்பாதம் சேருமுக் குளமும் பாடி
உளமகிழ்ந் தேத்தி வாழ்ந்தார்”

என்று சேக்கிழார் கூறப் போந்தார். அவர் கூறுமாறே திருவெண்காட்டு முக்குளம் தேவாரப் பாட்டில் அமையும் பெருமை பெற்றுள்ளது.10

திருவரங்குளம்

புதுக்கோட்டை நாட்டில் திருவரங்குளம் என்னும் பதியொன் றுண்டு. பழங்காலத்துப் பாண்டியர் பலர் திருவரங்குளநாதர் கோவிலுக்குப் பல வகையான நிவந்தங்கள் வழங்கியுள்ளார்கள்.11 .