பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

துறையும் நெறியும்

இறைவன் உறையும் துறைகள் பலவும் ஒரு திருப்பாட்டிலே தொகுக்கப் பெற்றுள்ளன.

“கயிலாய மலையெடுத்தான் கரங்களோடு
சிரங்கள் உரம் நெரியக்கால் விரலாற் செற்றோன்
பயில்வாய் பராய்த்துறைதென் பாலைத்துறை
பண்டெழுவர் தவத்துறை வெண்துறை”.

என்று பாடினார் திருநாவுக்கரசர்.

திருப்பராய்த்துறை


காவிரியாற்றினால் அமைந்த அழகிய துறைகளுள் ஒன்று திருப்பராய்த்துறை. அது பராய்மரச் சோலையின் இடையிலே அமைந்திருந்தமையால் அப் பெயர் பெற்றது போலும்: காவிரிக்கரையில் கண்ணுக்கினிய காட்சியளித்த பராய்த் துறையிற் கோயில் கொண்ட பரமனை,

“பரப்பு நீர்வரு காவிரித் தென்கரைத்
திருப்ப ராய்த்துறை மேவிய செல்வரே”

என ஆதரித்தழைத்தார் திருநாவுக்கரசர். இந் நாளில் இத்துறை திருப்பலாத்துறை என்று வழங்கும்.

காவிரி யாற்றங் கரையில் உள்ள மற்றொரு துறை பாலைத்துறையாகும். அத் துறையில் காட்சியளிக்கும் இறைவனை,

“மருவு நாண்மலர் மல்லிகை செண்பகம்
பரவு நீர்ப்பொன்னிப் பாலைத் துறையரே"