பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தேவும் தலமும் 201


திருஆவடுதுறை

அருளிய திருமூலர் வாழ்ந்ததும் அப்பதியே இன்னும், திருவிசைப்பா பாடிய திருமாளிகைத் தேவர் சிவகதியடைந்ததும் அப்பதியே. இத்தகைய ஆவடு துறை, பேராவூர் நாட்டைச் சேர்ந்தது என்று சாசனம் கூறுகின்றது. பசுவளம் பெற்ற நாட்டில் விளங்கிய அப்பதியினை “ஆவின் அருங் கன்றுறையும் ஆவடுதண்துறை" என்று போற்றினாா் சேக்கிழாா். அத் தலம், வட மொழியில் கோமுத்தீச்சுரம் என்று வழங்கும் பான்மையைக் கருதும் பொழுது ஆவடுதுறை யென்பது ஆலயப் பெயராக ஆதியில் அமைந்திருத்தல் கூடும் என்று தோன்றுகின்றது. அக் கோயிலிற் கண்ட சாசனம் ஒன்று ‘சாத்தனூரில் உள்ள திருவாவடு துறை' என்று கூறுதல் இதற்கொரு சான்றாகும்.13 சாத்தனூர் என்பது இப்பொழுது திருவாவடுதுறைக் கருகே ஒரு சிற்றுாராக உள்ளது. அவ்வூரில் எழுந்த ஆவடுதுறை என்னும் சிவாலயம் பல்லாற்றானும் பெருமையுற்றமையால், கோயிற் பெயரே ஊர்ப் பெயராயிற்றென்று கொள்ளலாகும்.

மேலே குறித்த திருநாவுக்கரசர் திருப்பாசுரத்தில் “மற்றும் துறை யனைத்தும் வணங்குவோமே” என்றமையால், இன்னும் சில துறைகளும் உண்டு என்பது பெறப்படும். அவற்றுள் திருமாந்துறையும், திருச்செந்துறையும், திருப்பாற்றுறையும் சிறந்தனவாகும்.

திருமாந்துறை என்ற பெயருடைய பதிகள் இரண்டு உண்டு. அவற்றுள் ஒன்று திருஞான சம்பந்தரால் பாடப்பெற்றது. மற்றொன்று வைப்புத் தலமாகக் கருதப்