பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

208 ஊரும் பேரும்

திருச்சாலைத்துறை

அங்குள்ள திருக்கோயிலின் பெயர். அவ்வூரில் அமைந்த சிவாலயம் திருப்போத்துடையார் கோவில் என்று பெயர் பெற்றிருந்தது. அஃது இன்று எரிச்சாவுடையார் கோவில் என வழங்குவதாகும்.28

செந்நெறி

துறை யென்பது கோவிற் பெயராக வழங்குதல் போன்று நெறி யென்று பெயர் பெற்ற சிவாலயங்களும் சில உண்டு. திருச்சேறைப் பதியில் அமைந்த கோயில் செந்நெறி யென்று பெயர் பெற்றது.29 அதனைச் செந்நெறி யுடையார் கோயில் என வழங்கலாயினர். அது நாளடைவில் உடையார் கோயில் ஆயிற்று.

நீள்நெறி

தண்டலை யென்பது ஒரு பாடல் பெற்ற தலம். அங்குள்ள ஆலயம் நீணெறி என்று தேவாரத்திற் போற்றப்படுகின்றது. மீளா நெறியாகிய நெடு நெறி காட்டும் இறைவன் அமர்ந்தருளும் ஆலயம் (நீணெறி) நீள்நெறி என்று பெயர் பெற்றது போலும்!

அரநெறி

திருவாரூரில் அமைந்த திருக் கோயில்களுள் ஒன்று அரநெறி யென்னும் பெயர் பெற்று விளங்கிற்று.

“அருந்தவனை அரநெறியில் அப்பன் தன்னை
அடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே”

என்று பாடினார் திருநாவுக்கரசர்.