பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அட்டானமும் அம்பலமும்

துறையும் நெறியும் கோயிற் பெயர்களாக அமைந்தவாறே அட்டானம், அம்பலம் என்னும் ஆலயப் பெயர்களும் உண்டு.

வீரட்டானம்

தமிழ் நாட்டில் வீரட்டானம் என்று விதந்துரைக்கப்படும் சிவப் பதிகள் எட்டு என்பர். “அட்டானம் என்றோதிய நாலிரண்டும்” என்று திருஞான சம்பந்தர் அவற்றைக் குறித்துப் போந்தார். கெடில நதியின் கரையில் அமைந்த அதிகை வீரட்டானம் முதலாக விற்குடி வீரட்டானம் ஈறாக உள்ள எட்டுத் தலங்களின் சீமை, திருப்பாசுரங்களாலும் சில சாசனங்களாலும் இனிது விளங்கும். சிவபெருமானது வீரம் விளங்கிய தலம் வீரட்டானமாகும்.1

திரு அதிகை வீரட்டம்

தென் ஆர்க்காட்டுப் பதிகளுள் சாலச் சிறந்த பெருமை வாய்ந்தது திருவதிகை என்பர். சூலை நோயுற்ற திருநாவுக்கரசர் அப்பிணி தீருமாறு உருக்கமாகப் பாட்டிசைத்த பெருமையும் அப்பதிக்கே உரியது.

“ஆற்றேன் அடியேன் அதிகைக் கெடில
வீரட்டானத் துறையம் மானே”

என்பது அவர் பாட்டு. கெடில நதிக் கரையில் அதிகையென்னும் ஊரில் வீரட்டானக் கோயிலுள் அமர்ந்த இறைவனை இவ்வண்ணம் உள்ளமுருகிப் பாடினார் திருநாவுக்கரசர். திரிபுரங்களில் அமைந்து தீங்கிழைத்த