பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

214 ஊரும் பேரும்


குறுக்கை- விரட்டம்

மாயவரத்திற்கு வடமேற்கே ஐந்து மைல் அளவில் உள்ள குறுக்கையிலுள்ள திருக்கோயிலும் வீரட்டானம் என்று திருநாவுக்கரசர் தேவாரம் குறிக்கின்றது. கண்ணப்பர் முதலிய அடியார்க்கு அருள்புரிந்த ஆண்டவனது பெருங்கருணையைக் குறுக்கையில் நினைந்து போற்றுகின்றார் நாவரசர்.

“நிறைகடல் மண்ணும் விண்ணும்
நீண்ட வானுலகும் எல்லாம்
குறைவறக் கொடுப்பர் போலும்
குறுக்கை வீரட்ட னாரே’

என்னும் திருப்பாசுரத்தால் அரந்தை கெடுத்து வரந்தரும் இறைவன் பெருமை இனிது விளங்குவதாகும். ஈசன்மீது மலர்க்கணை தொடுத்த மன்மதன் அவர் கண்ணழலாற் காய்ந்திடக் கண்டது குறுக்கை வீரட்டம் என்பர்.

திருக்கடவூர்- விரட்டம்

மாசற்ற பூசை புரிந்த மார்க்கண்டனுக்காகக் காலனைக் காலால் உதைத்த ஈசனது பெருங்கருணைத் திறம் தேவாரத்தில் பாசுரங்களிற் பாராட்டப்படுகின்றது. திருக்கடவூரில் அமைந்த வீரட்டானம் அவ் வைதிகத்தைக் காட்டுவதாகும்.

“மாலினைத் தவிர நின்ற .
மார்க்கண்டர்க் காக அன்று
காலனை உதைப்பர் போலும்
கடவூர் வீரட்ட னாரே"

என்று திருநாவுக்கரசர் அவ்வூரைப் பாடியுள்ளார். கடவூர் வீரட்டானத்து இறைவனைக் காலகால தேவர் என்று கல்வெட்டுக் குறிக்கின்றது.4