பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தேவும் தலமும் 215

திருக்கண்டியூர் - வீரட்டம்

திருவையாற்றுக்குத் தென்பால் உள்ள திருக்கண்டியூரில் அமைந்த கோயிலும் வீரட்டானமாகும். பிரமதேவனது செருக்கை அழிக்கக் கருதிய சிவபெருமான். அவன் சிரங்களில் ஒன்றையறுத்திட்ட செய்தியை இப் பதியோடு பொருத்தித் தேவாரம் போற்றுகின்றது. அச் செயலை “ஊரோடு நாடறியும்” என்று அருளினார் திருநாவுக்கரசர்.5

திருப்பறியலூர்- வீரட்டம்

இந் நாளில் பரசலூர் என வழங்கும் திருப்பறியலுரில் அமைந்த வீரட்டானத்தைத் திரு ஞான சம்பந்தர் பாடியுள்ளார்.

“திரையார் புனல்சூழ் திருப்பறிய லூரில் விரையார் மலர்ச்சோலை வீரட்டத் தானே”

என்பது அவர் தேவாரம். தருக்குற்ற தக்கன் தலையறு பட்ட இடம் திருப்பறியலூர் என்பர்.

வழுவூர்-வீரட்டம்

மாயவரத்துக்குத் தெற்கே நான்கு மைல் அளவில் உள்ளது வழுவூர் வீரட்டானம். அது சயங்கொண்ட சோழ வளநாட்டில் திருவழுந்துர் நாட்டைச் சேர்ந்த தென்று சாசனம் கூறும்.6 இரண்டாம் இராசராசன் முதலாய இடைக்காலச் சோழ மன்னர் அவ் வீரட்டானத்தை ஆதரித்த பான்மை கல்வெட்டுக்களால் விளங்குகின்றது.7

தஞ்சை நாட்டு நன்னில வட்டத்திலுள்ள விற்குடியில் அமைந்த கோயிலும் வீரட்டானம் என்று தேவாரம்