பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழகமும் நிலமும்

13

நலத்தினை அறிந்த பிற்காலத்தார் அவர் பிறந்த ஊரைத் திருநாவல் நல்லூர் என்று அழைப்பாராயினர். நாளடைவில் அப்பெயர் திரிந்து திருநாமநல்லூர் ஆயிற்று.

கெடில நதியின் தென்கரையில் பாதிரி மரங்கள் நிறைந்த புலியூர், திருப்பாதிரிப்புலியூர் என்று பெயர் பெற்றது. விருத்தாசலத்துக்குத் தெற்கே மற்றொரு புலியூர் உண்டு. அதனை எருக்கத்தம்புலியூர் என்று தேவார ஆசிரியர்கள் போற்றியுள்ளார்கள். அத்தம் என்பது காடு. எனவே, எருக்கத்தம் என்பது எருக்கங்காடாகும். எருக்கஞ் செடிகள் நெருக்கமாக நிறைந்திருந்த காட்டில் எழுந்த ஊர் எருக்கத்தம்புலியூர் என்று அழைக்கப் பெற்றது. சிவபெரு மானுக்கு இனிய வெள்ளெருக்கு இன்னும் அவ்வூர்க் கோவிலின் மூலஸ்தானத்தருகே விளங்குகின்றது. இக்காலத்தில் அவ்வூர் இராஜேந்திரப் பட்டணம் என வழங்கும்.

பாடி

முல்லை நிலத்திலே தோன்றும் ஊர்கள் பெரும்பாலும் பாடி என்று பெயர் பெறும். திருத்தொண்டராகிய சண்டேசுரர் பசுக்களை மேய்த்து, ஈசனுக்குப் பூசனை புரிந்த இடம் திருஆப்பாடி என்று தேவாரம் கூறுகின்றது. கண்ணன் பிறந்து வளர்ந்த கோகுலத்தை ஆயர்பாடி என்று தமிழ் நூல்கள் குறிக்கின்றன. வட ஆர்க்காட்டில் ஆதியில் வேலப்பாடி என்னும் குடியிருப்பு உண்டாயிற்று. வேல மரங்கள் நிறைந்த காட்டில் எழுந்த காரணத்தால் அது வேலப்பாடி என்று பெயர் பெற்றதென்பர். நாளடைவில் காடு நாடாயிற்று. வேலப்பாடியின் அருகே வேலூர் தோன்றிற்று.