பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழகமும் நிலமும்

15

பண்புற நடந்து வருகின்றது. பண்டைத் தமிழர் ஆற்று நீர் பாயும் நிலப் பரப்பைப் பண்படுத்திப் பயிர் செய்து மருத நிலமாக்கினார்கள். அருமந்த பிள்ளையைப் பாலூட்டி வளர்க்கும் தாய் போல் மருத நிலத்தை நீருட்டி வளர்ப்பது நதியென்று கண்டு அதனைக் கொண்டாடினார்கள்; காவிரியாற்றைப் பொன்னியாரென்று புகழ்ந்தார்கள், வைகையாற்றைப் பொய்யாக் குலக்கொடி’ என்று போற்றினார்கள். சுருங்கச் சொல்லின் நதியே நாட்டின் உயிர் என்பது தமிழர் கொள்கை.

ஆற்றங் கரைகளிலே சிறந்த ஊர்கள் அமைந்தன. ஆறில்லா ஊருக்கு அழகில்லை என்ற பழமொழியும் எழுந்தது. முற்காலத்தில் சிறந்து விளங்கிய நகரங்களும், துறைமுகங்களும் ஆற்றையடுத்தே உண்டாயின. உறையூர் என்பது சோழநாட்டின் பழைய தலைநகரம், அது காவிரிக் கரையில் அமைந்திருந்தது. பட்டினம் என்னும் சிறப்புப் பெயர் பெற்ற சோழநாட்டுத் துறைமுகம் காவிரியாறு கடலில் புகுமிடத்தில் வீற்றிருந்தது.அக்காரணத்தால் புகார் என்றும் காவிரிப்பூம்பட்டினம் என்றும் அந் நகரம் பெயர் பெறுவதாயிற்று. அவ்வாறே பாண்டி நாட்டுப் பெரு நதியாகிய வைகையின் கரையில் மதுரை என்னும் திருநகரம் அமைந்தது. பாண்டியர்க்குரிய மற்றொரு சிறந்த நதியாகிய பொருநையாறு கடலோடு கலக்குமிடத்தில் கொற்கை என்னும் துறைமுகம் சிறந்து விளங்கிற்று. எனவே, பண்டைத் தமிழகத்தின் வேளாண்மைக்கும் வாணிப