பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/252

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

242

ஊரும் பேரும்


என்று இராஜராஜ சோழனது சாசனம் கூறுமாற்றால்,அதன் பழமை விளங்குவதாகும்.27 திருவேங்கை வாயிலுடையார் கோயிலில் நிகழும் சித்திரைத் திருவிழாவில் சந்திக் கூத்து என்னும் ஆடல் புரியும் நாட்டிய மாதுக்கு விக்கிரம சோழன் விட்ட மானியம் ஒரு சாசனத்தால் விளங்குகின்றது.28

திருவள்ளை வாயில்

செங்கற்பட்டைச் சேர்ந்த பொன்னேரி வட்டத்தில் திருவள்ளை வாயில் என்னும் பழம்பதியுண்டு. அவ்வூர்ப் பெயர் இப்பொழுது திருவேளவாயில் என மருவி வழங்குகின்றது. சுவாமீச்சுரம் என்று பெயர் பெற்ற ஆலயத்தில் அமர்ந்த ஈசனார்க்கு நான்கு ஊர் வாசிகள் நல்கிய நிவந்தம் அக்கோயிற் கல்வெட்டிற் காணப்படுகின்றது.29 எனவே, வள்ளை வாயிலைப் பழைய வாயிற் பகுதிகளுள் ஒன்றாகக் கொள்ளலாகும்.

திருப்பில வாசல்

தொண்டை நாட்டிலே திருப்பில வாயில் என்னும் பதியொன்று உண்டு. அங்குக் கோயில் கொண்ட ஈசன் திரும்பில வாயிலுடையார் என்று கல்வெட்டிற் குறிக்கப்படுகின்றார். அக்கோயிலின் பழமை அங்குள்ள பல்லவ சாசனத்தால் நன்கு விளங்கு வதாகும்.30 பிற்காலத்தில் பிலவாயில் என்பது பிலவாயலூர் என மருவி வழங்கலாயிற்று. இராஜராஜன் காலத்தில் ஜனநாத நல்லூர் என்னும் மறுபெயர் பெற்றது அவ்வூர்.31 ஆயினும், பழம் பெயரே பெரும்பாலும் வழங்கி வந்ததாகத் தெரிகின்றது. கால கதியில் அப்பெயர் வாயலூர் எனக் குறுகிப் பின்பு வயலூர் எனத் திரிந்து வழங்குகின்றது.