பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/260

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

{{rh|250||}ஊரும் பேரும்}

கொள்ளுதல் பொருந்தும். சிரகிரியையுடைய ஊர் சிரபுரம் என்று பெயர் பெற்றுப் பின்பு திருசிரபுரம் ஆகச் சிறந்து, இறுதியில் திரிசிரபுரம் என்று ஆயிற்று.8

சிவப்பள்ளி

தஞ்சை நாட்டு மாயவர வட்டத்தில் உள்ள திருச்சம்பள்ளி என்ற ஊர் பழைய சிவப்பள்ளி என்று கொள்ளப்படுகின்றது. சிவன் பள்ளி , என்னும் கோயிற் பெயர் சிவம் பள்ளியென மருவி, திரு என்ற அடைபெற்றுத் திருச்சிவம் பள்ளியாகிப் பின்பு திருச்சம் பள்ளி எனச் சிதைவுற்றிருக்கலாம் என்று தோன்றுகின்றது.

செம்பொன் பள்ளி

இன்னும், மாயவர வட்டத்திலுள்ள மற்றொரு பள்ளி திருச் செம்பொன் பள்ளி. செம்பனார் கோவில் என்பது அதற்கு இப்பொழுது வழங்கும் பெயர். காவிரி யாற்றங்கரையில் களித்திலங்கும் அப்பள்ளியை,

“வரையார் சந்தோ டகிலும் வரும்பொன்னித்
திரையார் செம்பொன் பள்ளி"

என்று திருஞான சம்பந்தர் போற்றினார்.

நனிபள்ளி

மூவர் தேவாரமும் பெற்று விளங்கும் பதிகளுள் ஒன்று திருநனிபள்ளி. தலைச்சங்காட்டின் அருகேயமைந்துள்ள இப் பதியை,

“பங்காய மாமுகத் தாளுமை பங்கன்

உறைகோயில்

செங்கயல் பாயும் வயற்றிரு ஊர்நனி

பள்ளியதே