பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/263

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தேவும் தலமும்

253


மேலைத் திருக்காட்டுப்பள்ளி

காவிரியாற்றினின்று குடமுருட்டியாறு பிரிந்து செல்லும் இடத்தில் உள்ள மற்றொரு திருக்காட்டுப்பள்ளியும் பாடல் பெற்றதாகும்.

“கூட்டை விட்டுயிர் போவதன் முன்னமே
காட்டுப் பள்ளியு ளான்கழல் சேர்மினே”

என்று பணித்தார் திருநாவுக்கரசர். இக்காலத்தில் திருக்காட்டுப் பள்ளியிலுள்ள ஆலயம் அக்கினிசுரர் கோயில் என்ற பெயர் கொண்டு நிலவுகின்றது.

மகேந்திரப்பள்ளி

இன்னும், சோழநாட்டில் உள்ள மகேந்திரப் பள்ளியையும், சக்கரப் பள்ளியையும் குறித்தருளினார் திருஞான சம்பந்தர்.

“...............சீர்மகேந்திரத்துப்
பிறப்பில்லவன் பள்ளி வெள்ளச் சடையான்
விரும்பும் இடைப்பள்ளி வண்சக்கரமால் உறைப்பால் அடிபோற்றக் கொடுத்தபள்ளி
உணராய் மடநெஞ்சமே உன்னிநின்றே”

என்று எழுந்த திருப்பாசுரத்தில் அமைந்த மகேந்திரப் பள்ளி ஆச்சாபுரத்துக்கு அண்மையில் உள்ளது. இந்திரன் முதலிய இறையவர் வழிபட அங்கிருந்த ஈசனை

“சந்திரன் கதிரவன் தகுபுகழ் அயனொடும் இந்திரன் வழிபட இருந்தநம் இறையவன்”

என்று சம்பந்தர் போற்றியுள்ளார்.

சக்கரப்பள்ளி

இந்நாளில் ஐயம்பேட்டையென வழங்கும் ஊருக்கு அண்மையில் உள்ளது சக்கரப்பள்ளி. அப்பதியில் ஈசன் கோவில் கொண்ட