பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/267

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தேவும் தலமும்

257

“மல்குதண் துறை அரிசிலின் வடகரை
வருபுனல் மாகாளம்”

என்பது திருஞானசம்பந்தர் தேவாரம்.

தொண்டை நாட்டில் உள்ள இரும்பை மாகாளம் மற்றொன்று. அதன் சீர்மை,

“எண்திசையும் புகழ்போய் விளங்கும்
இரும்பை தன்னுள்
வண்டுகீதம் முரல் பொழில் கலாய்
நின்ற மாகாளமே”

என்னும் தேவாரத் திருப்பாட்டால் விளங்கும்.3

உஞ்சேனை மாகாளம் என்னும் பெயருடைய பிறிதொரு திருக்கோயில் வைப்புத் தலங்களுள் ஒன்றாக வைத்து எண்ணப்படுகின்றது.

நாகேச்சுரம்

கும்பகோணத்துக்கு அண்மையில் உள்ள திருநாகேச்சுரம் தேவாரப் பாமாலை பெற்ற பழம் பதியாகும். அது பழங்காவிரி யாற்றின் தென் கரையில் உள்ளது என்பது,

“பாய்புனல் வந்தலைக்கும் பழங்காவிரித் தென்கரை
நாயிறும் திங்களும் கூடி வந்தாடும் நாகேச்சுரம்”

என்னும் திருப் பாட்டால் விளங்கும். நாளடைவில் கோயிற் பெயரே ஊர்ப் பெயரும் ஆயிற்று. திருத்தொண்டர் புராண மியற்றிய சேக்கிழாருடைய உள்ளங் கவர்ந்த கோயில் திருநாகேச்சுரம். நாகேச்சுர நாதனை நாள்தோறும் வழிபடக் கருதிய அப் பெரியார் தாம் வாழ்ந்த தொண்டை நாட்டுக் குன்றத்துரில் ஒரு நாகேச்சுரம் கட்டுவித்தார் என்று அவர் வரலாறு கூறுகின்றது.4