பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/272

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

262

ஊரும் பேரும்


சித்தீச்சுரம்

திருநறையூர் என்னும் பாடல் பெற்ற பகுதியில் அமைந்த சிவாலயம் சித்தீச்சுரம். அதன் சிறப்பினைத் திருஞான சம்பந்தர் பாசுரம் தெரிவிக்கின்றது.

“ஈண்டு மாடம் எழிலார் சோலை இலங்கு கோபுரம் தீண்டு மதியம் திகழும் நறையூர்ச் சித்தீச் சரத்தாரே"

என்னும் திருப்பாட்டால் நறையூரின் செல்வமும் அங்குள்ள சோலையின் செழுமையும் நன்கு விளங்குவனவாகும்.

இராமேச்சுரம்

இலங்கையில் வாழ்ந்த அரக்கரை வென்றழித்த இராமன் திரும்பி வரும் பொழுது கடற்கரையில் அமைந்த திருக்கோயில் இராமேச்சுரம் ஆகும்.

“தேவியை வவ்விய தென்னிலங்கைத் தசமாமுகன் பூவியலும் முடி பொன்றுவித்த பழிபோயற ஏவியலும் சிலை அண்ணல் செய்த இராமேச்சுரம்”

என்பது திருஞான சம்பந்தர் தேவாரம். சேது காவலர் என்னும் சிறப்புப் பெயருடைய இராம நாதபுர மன்னரால் இப்பொழுதுள்ள கோயில் கட்டப்பட்டதென்று அறிந்தோர் கூறுவர். இந்திய நாடு முழுவதும் புகழ் பெற்ற சிவாலயங்களில் ஒன்று இராமேச்சுரம்.

இங்ஙனம் ஈச்சுரப் பகுதிகளைத் தொகுத்துரைத்த திருநாவுக்கரசர், இறுதியில், “இறைவனுறை சுரம் பலவும் இயம்புவோமே” என்று கூறுதலால் இன்னும் பல ஈச்சுரங்கள் உண்டு என்பது இனிது விளங்கும். பாடல் பெற்ற பல பதிகளில் உள்ள திருக் கோயில்கள் ஈச்சுரம் என்னும் பெயரால் தேவாரத்திற் போற்றப்பட்டுள்ளன.