பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/293

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருமேனியும் தலமும்

திருவிற்கோலம்

தொண்டை நாட்டுத் தலங்களுள் ஒன்று திருவிற்கோலம். அங்குள்ள ஈசன் கோயில் திரிபுராந்தகம் எனப்படும். திரிபுரங்களில் இருந்து தீங்கிழைத்த அவுணரை அழிக்கத் திருவுளங் கொண்ட இறைவன் வில்லெடுத்த கோலம் அங்கு விளங்குதலால் விற்கோலம என்ற பெயர் அதற்கு அமைந்ததென்பர். “திரிதருபுரம் எரிசெய்த சேவகன் உறைவிடம் திருவிற் கோலமே” என்று தேவாரமும் இச்செய்தியைத் தெரிவிக்கின்றது. எனவே, ஈசனது திருமேனியின் கோலத்தைக் குறித்த சொல், நாளடைவில் அவர் உறையும் கோயிலுக்கும் பெயராயிற் றென்பது விளங்கும். இத் தகைய விற்கோலம் கூகம் என்ற ஊரிலே காட்சியளித்தது.

“கோடல்வெண் பிறையனைக் கூகம் மேவிய
சேடன் செழுமதில் திருவிற் கோலத்தை”

என்று திருஞான சம்பந்தர் பாடுதலால், கூகம் என்பது ஊரின் பெயரென்றும், திருவிற்கோலம் அங்குள்ள ஆலயத்தின் பெயரென்றும் அறியலாகும். இக்காலத்தில் கூவம் என்பது அத் தலத்தின் பெயராக வழங்குகின்றது.

திருமேனிநாதபுரம்

தஞ்சை நாட்டுப் பட்டுக்கோட்டை வட்டத்தில் திருஆவணம் என்று வழங்கிய தலமொன்று உண்டு. அங்கு எழுந்தருளிய ஈசன் திருமேனிநாதர் என்னும் திரு நாமம் பெற்றார். இப்பொழுது அப்பெருமான் பெயரால் திருமேனி நாதபுரம் என்று அவ்வூர் அழைக்கப்பெறுகின்றது.1