பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/302

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

292

ஊரும் பேரும்


புராணம் கூறும்.12 எனவே, முருகப் பெருமானை வெற்றி வீரனாகக் கண்ட செந்தில் மாநகரம் உலகம் புகழும் ஓங்குயர் சீர்மை பெற்று விளங்குவதாயிற்று.

திருச்செங்கோடு

சேலம் நாட்டிலுள்ள செங்கோடு என்னும் மலையும் முருகன் விரும்பி யுறையும் பழம் பதிகளுள் ஒன்று என்பதை முன்னமே கண்டோம். அம் மலையடிவாரத்தில் அமைந்த ஊர் செங்குன்றூர் என்று தேவாரத்தில் பாடப் பெற்றுள்ளது. “குன்றன்ன மாளிகை திருச்செங்கோடு சூழ் கொடி மாடச் செங்குன்றூர்” என்று திருஞான சம்பந்தர் இப்பதியின் சீர்மையை எடுத்துரைத்தார். அழகிய கொடிகளையுடைய நெடு மாடங்களை அவ்வூரிற் கண்களிப்பக் கண்ட காழிக் கவிஞர் கொடி மாடங்களை ஊரோடு இணைத்துப் பாடினார் போலும்! செங்குன்றில் உள்ள சிகரம் செங்கோடு என்னும் பெயர் பெற்றது.

வெண்குன்று

கொங்கு நாட்டில் பவானி நதியும் சிந்தாமணியாறும் கலந்து கூடுமிடத்தில் தவளகிரி என்னும் மலையொன்று உண்டு. அங்கு முருகன் கோயில் கொண்டு விளங்கினான் என்பது சாசனத்தால் அறியப்படும்.13 வெண் கோடு என்ற தமிழ்ச் சொல்லுக்கு நேரான வடமொழிப்பதம் தவளகிரி யாதலால் இளங்கோவடிகள் குறித்த முருகப்பதி அதுவாயிருத்தல் கூடும்.

திருஏரகம் கும்பகோணத்திற்கு மேற்கேயுள்ள சுவாமி மலையே திரு ஏரகம் என்பர். அங்குக் கோயில் கொண்டுள்ள முருகன்