பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

ஊரும் பேரும்

அருகே சில ஊர்கள் எழுந்தன. நெல்லை நாட்டிலுள்ள பத்தமடை என்னும் பத்தல் மடையும், பாலாமடையும், மதுரையிலுள்ள மேலமடை முதலிய ஊர்களும் இதற்குச் சான்றாகும்.

ஏரி

ஏர்த் தொழிலாகிய பயிர்த் தொழிலுக்குப் பயன்படும் தண்ணீரைத் தேக்கி வைக்கும் நிலையம் ஏரி எனப்படும். இத்தகைய ஏரியின் மருங்கே எழுந்த ஊர்கள் தமிழ் நாட்டிலே பலவாகும். சில ஏரிகள் பண்டையரசர் பெயரால் இன்றும் அழைக்கப் படுகின்றன. சித்துர் நாட்டில் பல்லவனேரி என்பது ஓர் ஊரின் பெயர். அது பல்லவ மன்னனால் ஆக்கப்பட்டதாகும். பாண்டி நாட்டில் மாறனேரி என்று பெயர் பெற்ற ஊர்கள் பல உண்டு. மாறன் என்னும் சொல் பாண்டியனைக் குறிக்கும். தொண்டை நாட்டிலுள்ள தென்னேரி என்னும் ஊரும் ஏரியின் அருகே எழுந்ததாகும். அது திரையன் என்னும் குறுநில மன்னனால் உண்டாக்கப்பட்டது. திரையனேரி என்பது சிதைந்து தென்னேரி ஆயிற்று. கொங்கு நாட்டில் வீரபாண்டியன் என்னும் அரசனால் ஓர் ஏரி உண்டாக்கப்பட்டது. அதனருகே எழுந்த ஊர் வீரபாண்டியப் பேர் ஏரி என்று பெயர் பெற்று, இப்பொழுது ஏரி என்றே வழங்குகின்றது.

தெய்வப் பெயர் தாங்கிய ஏரிகளும் தமிழ் நாட்டிலே பல உண்டு. திருச்செந்தூரிலுள்ள அறுமுகச் செவ்வேளின் பெயரால் அமைந்தது ஆறுமுகனேரி. நாங்குனேரி வட்டத்தில் மலையாள மன்னனால் வெட்டப்பட்ட