பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழகமும் நிலமும்

23

ஏரியொன்று பத்மனாபன் ஏரி என்று பெயர் பெற்று, இப்பொழுது பதுமனேரி என வழங்குகின்றது.

பேரேரி

இன்னும், பேரி என்னும் சொல்லை இறுதியாக வுடைய ஊர்ப் பெயர்கள் சில உள்ளன. நெல்லை நாட்டில் சீவலப் பேரி, கண்டியப்பேரி, அலங்காரப்பேரி, விசுவநாதப்பேரி முதலிய பேரிகள் உண்டு. பேரி என்பது பேரேரி என்பதன் சிதைவாகும். பெரிய ஏரிகள் பேரேரி என்று பெயர் பெற்றன. இதற்குச் சான்று சாசனங்களிற் காணலாம். மதுராந்தகன் என்னும் மன்னன் ஆக்கிய பேரேரி மதுராந்தகப் பேரேரி என்றும், ஆர்க்காட்டில் சுந்தரசோழன் கட்டிய ஏரி சுந்தர சோழப் பேரரேரி என்றும் கல் வெட்டுக்களில் குறிக்கப்பட்டுள்ளன. திருநெல்வேலியிலுள்ள சீவலப்பேரியின் பழம் பெயர் முக்கூடல் என்பதாகும். அஃது அவ்வூருக்கு இயற்கையாக அமைந்த பெயர். பிற்காலத்தில் ஸ்ரீ வல்லபன் என்னும் பாண்டியன் அவ்வூரில் பேரேரி ஒன்று உண்டாக்கி, சீவல்லபப் பேரேரி என்று அதற்குப் பெயரிட்டான். அப்பெயர் சிதைந்து சீவலப்பேரியாயிற்று. கன்னட நாட்டுச் செல்வன் ஒருவன் நெல்லை நாட்டிற்போந்து தாமிரபருணி ஆற்றில் ஓர் அணைகட்டி அதன் நீரைக் கால்வாய்களின் வழியாகக் கொண்டு சென்று பயிர்த் தொழிலைப் பேணினான் என்று பழங் கதையொன்று வழங்குகின்றது. அவ்வாற்றில் மூன்றாம் அணைக்கட்டு, கன்னடியன் அனை என்று இன்றும் வழங்குவது அதற்குச் சான்றாகும். அக் கன்னடியன் நெல்லை நகரத்தின் அருகே பெரியதோர் ஏரியும் கட்டி, அதற்குக் கன்னடியப் பேரேரி என்று