பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/338

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

328

ஊரும் பேரும்


புலிவலம்

இன்னும் திருக்கயிலாச நாதர் காட்சி தரும் இடங்களைத் தொகுத்துக் கூறும் திருப்பாசுரத்தில்,

“புலிவலம் புத்துர் புகலூர் புன்கூர்
புறம்பயம் பூவணம் பொய்கை நல்லூர்”

என்று எடுத்துப் பாடலுற்றார் திருநாவுக்கரசர். இவற்றுள் புலிவலமும், பொய்கை நல்லூரும் வைப்புத் தலங்களாகும். செங்கற்பட்டு நாட்டிலுள்ள மதுராந்தக வட்டத்தில் உத்தரமேரூரின் அருகே திருப் புலிவனம் என்ற ஊர் உண்டு. அங்குள்ள பழமையான சிவாலயத்திற்குப் பராந்தக சோழன் முதலாய சிறந்த மன்னர் விட்ட நிவந்தங்கள் உத்தர மேரூர்ச் சாசனங்களிற் குறிக்கப்படுகின்றன. அவற்றில் அப்பதி திருப்புலிவல்ம் என்று காணப்படுதலால், திருநாவுக்கரசர் குறித்த தலம் அதுவே என்று கொள்ளுதல் கூடும்.

பொய்கைநல்லூர்

தொண்டை நாட்டுத் தாமற் கோட்டத்தில் பொய்கை நல்லூர் என்ற பழமையான ஊர் உள்ளது. அவ்வூரில் அமைந்த அகத்தீச்சுரம் என்னும் பொய்கைநல்லூர் சிவாலயத்திற்கு வயிர மேக வர்மன் வழங்கிய நிவந்தம் ஒரு சாசனத்திற் குறிக்கப்படுகின்றது. தேவார வைப்புத் தலங்களுள் ஒன்றாகிய இப் பொய்கைநல்லூர் இப்போது அரக்கோண வட்டத்திற் காணப்படும்.25

திருக்காரிக்கரை

தொண்டை நாட்டுத் தலங்களை வழிபட்ட திருஞான சம்பந்தரும் திருநாவுக்கரசரும் காளத்திநாதனைக் காணச் செல்லும் வழியில் திருக்காரிக் கரையைத் தொழுதார் என்று இருவர் வரலாறும் கூறுகின்றன.