பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

ஊரும் பேரும்

பெயரிட்டான். நாளடைவில் அவ்வேரியும், அதைச் சார்ந்த ஊரும் கண்டியப் பேரி என்று மருவி வழங்கலாயின. அலங்காரப்பேரி என்பது மற்றோர் ஊரின் பெயர். தண்ணி பெருகி நிறைந்து, தெள்ளிய அலைகள் எழுந்து, அலைந்து வரும் அழகு அலங்காரப் பேரி என்னும் பெயரிலே விளங்குகின்றது.

கோட்டகம்

கோட்டகம் என்பதும் பெரிய ஏரியின் பெயர்.79 காவிரி நாட்டில் பல கோட்டகங்கள் உண்டு. கோட்டகம் தஞ்சை நாட்டில் உள்ள புதுக் கோட்டகம், மானங்காத்தான் கோட்டகம் முதலிய ஊர்கள் இதற்குச் சான்றாகும்.

குளம்

ஏரிக்கு அடுத்தபடியாக வேளாண்மைக்கு உதவுவது குளம். குளம் என்னும் முடிவுடைய ஊர்ப்பெயர்கள் தமிழ்நாடு முழுவதும் காணப்படும். குளங்கள் நிறம் பற்றியும், அளவு பற்றியும், பல பெயர்களைப் பெற்று வழங்கும். நெல்லை நாட்டிலுள்ள கருங்குளமும், திருச்சி நாட்டிலுள்ள செங்குளமும் அவற்றிலுள்ள நீரின் நிறத்தைக் காட்டுகின்றன. மதுரையிலுள்ள பெருங்குளம் என்னும் ஊர் பெரியதொரு குளத்தின் அருகே எழுந்ததாகும். தஞ்சை நாட்டுப் பூங்குளமும், தென்னார்க்காட்டுப் புதுக்குளமும் அக்குளங்களின் தன்மையைப் புலப்படுத்துகின்றன.

சமுத்திரம்

சில ஊர்ப் பெயர்களில் சமுத்திரம் என்ற வடசொல் இடம் பெற்றிருக்கின்றது. தமிழ்நாட்டு மன்னரும் செல்வரும் உண்டாக்கிய பெரிய ஏரிகள், கடல் என்றும், சமுத்திரம் என்றும், வாரிதி என்றும் புனைந்துரைக்கப் பெற்றன. இராஜராஜ சோழன் வெட்டிய