பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/343

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தேவும் தலமும்

333


திருநீற்றுச் சோழ நல்லூர்

சோழன் திருச்சிற்றம்பல நல்லூர் என்ற ஊரை இறையிலி யாக்கித் திருப்பாலைத் துறையுடையார்க்குத் தேவதானமாக அளித்தான் என்று சாசனம் கூறும்.5

“மந்திரமாவது நீறு, வானவர் மேலது நீறு” என்று திருஞான சம்பந்தர் பாடியருளிய திருநீறு சைவர்கள் அணிந்து போற்றும் சிவ சின்னமாகும். சைவப் பெருமன்னர் இருவர் தம்மைத் திருநீற்றுச் சோழன் என்று கூறிக்கொள்ள ஆசைப்பட்டார்கள். அவருள் ஒருவன் முதற் குலோத்துங்க சோழன். அம்மன்னன் செங்கற்பட்டைச் சேர்ந்த முன்னலூர் என்னும் ஊருக்குத் திருநீற்றுச் சோழ நல்லூர் என்று பெயரிட்டு, அதனைத் திருசூலத்திலுள்ள சிவாலயத்திற்கு நன்கொடையாக வழங்கினான் என்று ஒரு சாசனம் கூறும்.6

இரண்டாம் குலோத்துங்க சோழனும் திருநீற்றுச் சோழன் என்னும் விருதுப் பெயர் பூண்டான். அவன் செங்கற்பட்டைச் சேர்ந்த களத்தூரில் உள்ள திரு ஆலக் கோயில் என்னும் சிவாலயத்திற்குக் குலோத்துங்க சோழன் திருநீற்றுச் சோழ நல்லூர் என்ற ஊரைத் தேவ தானமாகக் கொடுத்தான்.7

இன்னும், தஞ்சை நாட்டில் திருக்கண்ணபுரத்துக்கு அண்மையில் திருநீற்றுச் சோழபுரம் என்ற ஊர் இருந்ததாகத் தெரிகின்றது.8 சிதம்பரக் கோயிற் சாசனத்தில் திருநீற்றுச் சோழ மங்கலம் குறிக்கப்படுகின்றது.9 இன்னும், திருநீறு என்னும் பெயருடைய ஊர் ஒன்று திருப்பாசூர்ச் சாசனத்திற் கூறப்பட்டுள்ளது. திருநீறு என்ற ஊரில் வாழ்ந்த வணிகர்,