பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழகமும் நிலமும்

25

பெருங்குளம் ஒன்று சோழ சமுத்திரம் என்று சாசனத்திற் குறிக்கப்படுகின்றது. எனவே, தமிழ் நாட்டு ஊர்ப் பெயர்களில் உள்ள சமுத்திரம் என்னும் சொல், பெரும்பாலும் ஏரியின் பெயரென்று கொள்ளலாகும். நெல்லை நாட்டில் அம்பா சமுத்திரம் முதலிய பல ஊர்கள் உள்ளன. அம்பாசமுத்திரத்தின் ஆதிப்பெயர் இளங்கோக்குடி என்பது.” அவ்வூரின் அருகே எழுந்த குளம் அம்பாள் சமுத்திரம் என்று பெயர் பெற்றது. அப்பெயர் சிதைந்து அம்பாசமுத்திரம் ஆயிற்று.

முன்னாளில் ஏரியென்று பெயர் பெற்றிருந்த சில நீர்நிலைகள் இக்காலத்தில் சமுத்திரம் என வழங்குவதற்குச் சான்று சாசனங்களிற் காணப்படும். தொண்டை நாட்டுத் தென்னேரி என்னும் ஊரில் உள்ள பழமையான ஏரியின் கரை ஒருகால் பெருமழையால் உடைந்து போயிற்று. அதனைக் கட்டிக் கொடுத்துப் புகழ்பெற்ற தாதாச்சாரி என்பவர், திரையனேரிக்குத் தாதா சமுத்திரம் என்று பெயரிட்டார் எனச் சாசனம் கூறுகிறது.

ஏந்தல்,தாங்கல்

இன்னும் சிற்றேரியைக் குறிக்கும் ஏந்தல், தாங்கல் என்னும் இரு சொற்களும் ஊர்ப்பெயர்களில் வழங்குகின்றன. இளவரசன் ஏந்தல், செம்பியன் ஏந்தல் முதலிய ஊர்கள் ஏரியினடியாகப் பிறந்தனவாகும். தாங்கல் என்ற பெயருக்குச் சான்றாக ஆலந்தாங்கல் வடஆர்க்காட்டிலும், வளவன் தாங்கல் செங்கற்பட்டிலும் உள்ளன.

ஆவி,வாவி

ஆவியும், வாவியும் குளத்தின் பெயர்களாகும். அவை சிறுபான்மையாக ஊர்ப்பெயர்களில்