பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/353

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தேவும் தலமும்

343


இருந்தையூர்

இத் தகைய திருக்கோலங்களால் எழுந்த ஊர்ப் பெயர்களும் தமிழ் நாட்டில் உண்டு. பாண்டி நாட்டில் வைகை யாற்றின் கரையில் அழகராகிய பெருமாள் இருந்தருளும் கோலம் பரிபாடலால் விளங்குவதாகும்.

“மருந்தாகும் தீநீர் மலிதுறை
மேய இருந்தையூர் அமர்ந்த செல்வ”

என்று திருமாலின் இருந்த திருக்கோலம் குறிக்கப்படுகின்றது. இவ்வண்ணம் பெருமாள் காட்சியளித்த இடம் “இருந்த வளம்” என்று பெயர் பெற்றது. இருந்தை என்று பாட்டில் வரும் பெயர் இருந்த வளம் என்றதன் குறுக்கம் ஆகும். அப் பெருமாளை இருந்த வளமுடையார் என்று அழைத்தனர் பழந் தமிழ் நாட்டார். இந் நாளில் கூடலழகராக விளங்கும் பெருமாளே இருந்தையூர்ச் செல்வன் என்பர். இருந்தையூர்க் கொற்றன் புலவன் என்பார் பாடிய பாட்டொன்று குறுந்தொகையிலே காணப்படுகின்றது. அப் புலவர் இவ்வூரைச் சேர்ந்தவர் என்று கருதலாகும்.

திரு நின்றவூர்

இன்னும், திருமால் நின்றருளும் கோலத்தைக் காணும் பேறு பெற்ற ஊர் ஒன்று நின்றவூர் என்று பெயர் பெற்றது. பாடல் பெற்ற திருப்பதிகளுள் அதுவும் ஒன்று. “கருமுகிலை எம்மான் தன்னை, நின்றவூர் நித்திலத்தை” என்று அங்குள்ள பெருமாளைப் பாடினார் திருமங்கை யாழ்வார். திரு நின்றவூர் என்னும் அருமைத் திருப் பெயர் இப்பொழுது தின்னனூர் என மருவி வழங்குகின்றது.