பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/363

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தேவும் தலமும்

353


போற்றினர்.22 அதனால் அத்தலம் தஞ்சை மாமணிக் கோயில் என்னும் திரு நாமம் பெற்றது. நூற்றெட்டுத் திருப்பதி களுள் ஒன்றாகிய மாமணிக் கோயில் தஞ்சாவூருக்கு வடக்கே மூன்று மைல் தூரத்தில் உள்ளது.

“வம்புலாம் சோலை மாமதிள் தஞ்சை
மாமணிக் கோயிலே வணங்கி
நம்பிகாள் உய்ய நான்கண்டு கொண்டேன்
நாராயணா என்னும் நாமம்”

என்ற திருமங்கை யாழ்வார் திருமொழியைப் பெற்றது இத்தலமே யாகும்.

பச்சைப்பெருமாள் கோயில்

திருமால், “பச்சைமா மலைபோல் மேனியர் என்று ஆழ்வார்களால் பாடப்பட்டிருத்தலால் பச்சைப் பெருமாள் எனவும் அவரை வழங்குவர். காஞ்சிபுரத்தில் பச்சை வண்ணர் கோயில் ஒன்று உண்டு. பூவிருந்தவல்லிக்கு மேற்கே பெருமாள் கோயில் என வழங்குவது, பச்சை வண்ணப் பெருமாள் வீற்றிருக்கும் தலமாகும்.

சிங்கப்பெருமாள் கோயில்

சின்னக் காஞ்சிபுரம் என வழங்கும் அத்தியூரில் வேளுக்கை என்னும் திருமால் கோயில் உள்ளது. “மன்னு மதிட்கச்சி வேளுக்கையாளரியை” என்று திருமங்கையாழ்வார் இப்பெருமாளையே பாடினர் என்பர். இன்னும், சிங்கப் பெருமாள் கோயில் என்னும் தலம் செங்கற்பட்டுக்கு வடபால் உள்ளது.