பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/369

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தேவும் தலமும்

359


சிராப்பள்ளி

சோழநாட்டின் தலைநகரமாக விளங்கிய உறையூரின் அருகேயமைந்த சிராப்பள்ளிக் குன்றத் திலும் சமண முனிவர்கள் இருந்ததாகத் தெரிகின்றது. அக்குன்றின் மீதுள்ள குகைக் கோயிலில் சிவபெருமானது திருவுருவத்தை நிறுவிய மன்னன் ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த மகேந்திர வர்மன் என்பது சாசனத்தால் விளங்கும்.4

திருமலை

வட ஆர்க்காட்டில் திருமலை என்னும் குன்றம் ஒன்றுண்டு. அது வைகானுரை அடுத்திருத்தலால் வைகைத் திருமலை எனவும் வழங்கும். மன்னரால் மதிக்கப் பெற்ற சமண முனிவர்கள் அம்மலையில் வாழ்ந்ததாகத் தெரிகின்றது. இராஜராஜ சோழன் காலத்தில், “கொலை புரியும் படையரசர் கொண்டாடும் குண வீரமா முனிவன்” என்று புகழப்படுகின்ற ஒரு முனிவர் திருமலை யேரிக்குக் கலிங்கு கட்டி, வைகை மலையின் இரு மருங்கும் நெல் விளையக் கண்டு களித்தார் என்று அம்மலைக் கல்வெட்டொன்று கூறுகின்றது.5

இராஜராஜன் தமக்கையாராகிய குந்தவைப் பிராட்டியார் வைகைத் திருமலையில் ஒரு ஜினாலயம் அமைத்தார். அது குந்தவை ஜினாலயம் என்று பெயர் பெற்றது.6 பொன்னுரைச் சேர்ந்த ஒரு நங்கை அம்மலையில் அருகன் திருவுருவை நிறுவினாள். “பொன்னெயில் நாதனை வைகைத் திருமலைக்கு ஏறியருளப் பண்ணினாள் அந் நல்லாள் என்று சாசனம் கூறுகின்றது.7