பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

ஊரும் பேரும்

மைல் நீளமுள்ள அகன்ற கரையால் இரு பெருங் குன்றுகளை இணைத்து அக்குளம் ஆக்கப்பட்டுள்ளது.

ஊற்று

ஆற்று நீராலும் வானமாரியாலும் நிறைந்து பயிர்த் தொழிலுக்குப் பயன்படும் நீர் நிலைகளே பெரும்பாலும் தமிழகத்தில் உள்ளன. எனினும், ஊற்று நீரால் நிறைந்த கேணி, கிணறு முதலிய பல்வகைப்பட்ட நீர் நிலைகளும் அவற்றின் அடியாக எழுந்த ஊர்கள் நெல்லை நாட்டில் உள்ள தாழை யூற்றும், இராமநாதபுரத்தில் உள்ள அத்தியூற்றும், திருச்சி நாட்டிலுள்ள கண்ணுற்றும், சேலம் நாட்டில் உள்ள மாவூற்றும் ஆகும்.

கேணி,கிணறு

இன்னும் ஊற்று நீரால் நிறையும் கேணியும் கிணறும் சில ஊர்களைத் தோற்றுவித்துள்ளன. சென்னை மாநகரிலுள்ள திருவல்லிக்கேணியும், நெல்லை நாட்டிலுள்ள நாரைக் கிணறும் இவ்வுண்மைக்குச் சான்றாகும்.

நிலம்

இங்ஙனம் ஆற்று நீராலும், ஊற்று நீராலும் ஊட்டி வளர்க்கப்படும் நிலத்தின் தன்மையை உணர்த்தும் பெயர்களைக் கொண்டுள்ள ஊர்கள் பலவாகும். நிலம் என்னும் சொல்லை நன்னிலம் என்ற நிலம் ஊர்ப் பெயரிற் காணலாம். அப்பெயரிலுள்ள அடைமொழி அந்நிலத்தின் வளத்தைக் குறிப்ப தென்பர்.

புலம்

புலம் என்னும் சொல்லும் நிலத்தைக் குறிக்கும். தஞ்சை நாட்டில் தாமரைப் புலம், கருவப் புலம், செட்டி புலம் முதலிய ஊர்கள் உண்டு.