பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/382

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6. தமிழகம் - அன்றும் இன்றும்

முன்னொரு காலத்தில் இமயம் முதல் குமரிவரை தமிழ் மொழியே பரவியிருந்த தென்பது தக்கோர் கருத்து. அப் பழம்பெருமையை நினைந்து,

“சதுர்மறை ஆரியம் வருமுன்
சகமுழுதும் நினதானால்
முதுமொழி நீ அனாதியென
மொழிகுவதும் வியப்பாமே"

என்று மனோன்மணியம் பாடிற்று. அந்நாளில் கங்கை நாட்டிலும்,காவிரிநாட்டிலும் தாளாண்மை யுடைய தமிழர் வேளாண்மை செய்தனர்;வளம் பெருக்கினர்; அறம் வளர்த்தனர். கங்கைத் திரு நாட்டில் பயிர்த் தொழில் செய்த வேளாளர் இன்றும் தமிழகத்தில் கங்கை குலத்தவர் என்றே கருதப்படு கின்றார்கள்.எனவே, பழங்காலத்தில் பாரத நாடு முழுவதும் தமிழகமாகவே விளங்கிற்று.

அந்நிலையில் ஆரியர் வந்தனர்; வட நாட்டில் குடியேறினர். நாளடைவில் அந்நாட்டில் ஆரியரும் தென்நாட்டில் தமிழரும் அமைந்து வாழ்வாராயினர். ஆரியர் மொழி வடமொழி யென்றும்,தமிழர் மொழி தென் மொழியென்றும் பெயர் பெற்றன. தென் மொழியின் வழி வந்த திராவிட மொழிகளில் கன்னடமும் தெலுங்கும் தென்னாட்டில் தனித்தனியே வாழத் தலைப்பட்டன. அதனால்