பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழகமும் நிலமும்

31

குறிக்கும் சொற்கள் சிறு பான்மையாக ஊர்ப் பெயர்களில் வழங்கக் காணலாம். தஞ்சை நாட்டில் தோட்டம் பூந்தோட்டமும், தென்னார்க்காட்டில் இஞ்சிக் கொல்லையும், கருப்புக் கிளாரும் உள்ளன. தோட்டம், கொல்லை, கிளார் என்பன ஒரு பொருட்சொற்கள்.

ஊர்

நால் வகை நிலங்களிலும் பொதுவாகத் தமிழ் மக்கள் குடியிருந்து வாழ்ந்தாரேனும் மருத நிலமே சிறப்பாகக் குடியிருப்புக்கு ஏற்றதாகக் கொள்ளப்பட்டது. ஆதலால், ஊர் என்னும் பெயர் மருத நிலக்குடியிருப்பைக் குறிக்கும்.’ மரப் பெயர், மாப் பெயர் முதலிய எல்லா வகையான பெயர்களோடும் ஊர் என்னும் சொல் சேர்ந்து, தமிழ் நாட்டில் வழங்கக் காணலாம். மருத மரத்தின் அடியாகப் பிறந்த ஊர் மருதூர்; நாவலடியாகப் பிறந்த ஊர் நாவலூர். இன்னும் தேவாரப் பாடல் பெற்ற தெங்கூரும், பனையூரும் பாசூரும், கடம்பூரும் மரங்களாற் பெயர் பெற்ற பதிகளே யாகும்.

பறவையும் ஊரும்

அன்னமும், மயிலும் சில ஊர்ப் பெயர்களில் அமைந்திருக்கின்றன. நம்மாழ்வார் பிறந்த ஊர் குருகூர் ஆகும். குருகு என்பது அன்னத்தின் பெயர். சென்னையில் உள்ள மயிலாப்பூர் மயிலோடு தொடர்புடைய தென்பது தேற்றம். நாரையாற் பெயர் பெற்ற ஊர் திருநாரையூர். கோழியின் பெயர் கொண்டது கோழியூர். கொக்கைக் குறிக்கும் வண்டானம் என்பது ஓர் ஊரின் பெயர்.