பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஊரும் பேரும்

32

புலியூர்


இன்னும், விலங்குகளுள் புலியின் வீரத்தைப் பண்டைத் தமிழர்கள் வியந்து பாராட்டியதாகத் தெரிகின்றது. அவ்விலங்கின் பெயர் கொண்ட ஊர்கள் பலவாகும். பாதிரிப் புலியூர், எருக்கத்தம் புலியூர் முதலிய ஊர்கள் பாடல்கள் பெற்றுள்ளன. இன்னும், திருச்சி நாட்டில் பெரும்புலியூர், குறும் புலியூர் என்னும் ஊர்கள் உண்டு. பெரும்புலியூர் என்பது பெரம்பலூர் என்றும், குறும் புலியூர் என்பது குறும்பலூர் என்றும் இக்காலத்தில் வழங்கப் படுகின்றன. மாயவரத்துக்குத் தெற்கே சிறு புலியூர் என்ற ஊர் உள்ளது.

நல்லூர்

தமிழ் நாட்டு ஊர்களை நல்லூர் என்றும் புத்தூர் என்றும் வகுத்துக் கருதலாகும். பெண்ணை யாற்றங்கரையில் அமைந்தது திருவெண்ணெய் நல்லூர். அது சுந்தர மூர்த்தியைத் தடுத்தாட் கொண்ட ஈசன் கோவில் கொண்டுள்ள இடம் .சைவ சமய ஞான நூலாகிய சிவஞான போதத்தை அருளிச் செய்த மெய்கண்ட தேவர் பிறந்தருளும் பேறு பெற்ற நல்லூரும் அதுவே. கும்பகோணத்துக்கருகே நல்லூர் என்னும் பெயருடைய ஊர் ஒன்று உள்ளது. அமர் நீதி என்னும் அடியார் அவ்வூரில் தொண்டு செய்து சிவப் பேறு பெற்றார் என்று சேக்கிழார் கூறுகிறார். மண்ணியாற்றங் கரையில் முருகவேளின் பெயரால் அமைந்த சேய் நல்லூர் இந்நாளில் சேங்கனூர் என்று வழங்கும். வட ஆர்க்காட்டிலுள்ள மற்றொரு சேய் நல்லூர் சேனூர் எனப்படும்.