பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

ஊரும் பேரும்

நெய்தல் நிலம்

கரை

தமிழ் நாடு நெடிய கடற்கரை யுடையது. முன்னாளில் சோழ நாட்டுக் கடற்கரை, சோழ மண்டலக்கரை என வழங்கிற்று. அஃது ஐரோப்பியர் நாவில் சிதைந்து கோர மண்டல் கரையாயிற்று. பாண்டி நாட்டுக் கடலில் நினைப்பிற் கெட்டாத நெடுங்காலமாக நல் முத்து விளைந்தமையால் அக்கரை முத்துக்கரை என்று பிற நாட்டாரால் குறிக்கப்பட்டது. சேர நாட்டுக் கடற்கரை, மேல் கரை என்று பெயர் பெற்றது.

கடற்கரையில் அமைந்த சில ஊர்களின் தன்மையை அவற்றின் பெயர்களே காட்டும். பாண்டி நாட்டில் கீழக் கரை என்பது ஓர் ஊரின் பெயர்.அக்காலத்தில் முத்துச் சலாபம் அங்குச் சிறப்பாக அமைந்தது. பிற் காலத்தில் மரக்கல வணிக மன்னராய் விளங்கிய சீதக்காதி என்னும் மகமதிய வள்ளல் அவ்வூரில் சிறந்து வாழ்ந்தார்.இன்னும் வைகையாறு கடலோடு கலக்கும் இடத்தில் அமைந்த ஊருக்கு ஆற்றங்கரை என்பது பெயர். முன்னாளில் சங்கு வாணிபம் அவ்வூரில் நன்கு நடைபெற்றது. இராமேசு வரத்துக்கு அண்மையில் கோடிக்கரை என்னும் ஊர் உண்டு.அது தாலமி முதலியயவன ஆசிரியர்களாலும் குறிக்கப்பட்டுள்ளது. முற்காலத்தில் தென்னிந்தியா வினின்று இலங்கை நாட்டுக்குச் செல்வதற்குக் கோடிக்கரை மார்க்கமே குறுக்கு வழியாக இருந்தது.

துறை

கடல் வாணிபத்திற்குச் சாதனமாகிய இடம் துறை என்று பெயர் பெறும். இக்காலத்தில் அதனைத் துறைமுகம்