பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழகமும் நிலமும்

35

என்பர். பண்டைத் துறைமுகங்கள் பெரும்பாலும் ஆற்று முகங்களில் அமைந்திருந்தன. குமரியாறு கடலொடு கலந்த இடத்தில் குமரித்துறை இருந்ததாக இலக்கியம் கூறுகின்றது. அத்துறையில் விளைந்த முத்துச்சலாபத்தின் செம்மையைக் குமரகுருபர அடிகள் பாராட்டுகின்றார். குமரித்துறை கடலாற் கொள்ளப்பட்டு அழிந்தது. இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பு கொற்கைத் துறை தென்னாட்டுப் பெருந் துறையாக இருந்தது. அத்துறையில் விளைந்த முத்து, கடல் கடந்து, பிற நாடுகளிற் போந்து பெரு மதிப்புப் பெற்றது. கொற்கைத்துறை செல்வச் செழுந்துறையாய் இலங்கிய தன்மையால் பாண்டிய மன்னன் கொற்கைத் துறைவன் என்றும், கொற்கைக் கோமான் என்றும் குறிக்கப்பட்டான்.

தாமிரபருணி யாற்று முகத்தில் வீற்றிருந்த கொற்கைத் துறை நாளடைவில் தூர்ந்து போயிற்று. அந் நிலையில் கடற்கரையில் அமைந்த காயல் என்ற ஊர் சிறந்த துறைமுக மாயிற்று. பதின்மூன்றாம் நூற்றாண்டளவில், காயல் சிறந்ததொரு நகரமாக விளங்கிற்று. இத்தாலிய அறிஞராகிய மார்க்கோ போலோ என்பவர், தமிழ்நாட்டிற் போந்தபோது காயல் துறையின் செழுமையைக் கண் களிப்பக் கண்டார். அத்துறைமுகத்தில் இடையறாது நடந்த ஏற்றுமதியையும் இறக்குமதியையும் அவர் குறித்துள்ளார்; முத்துக் குளிக்கும் முறையினை விரிவாக விளக்கியுள்ளார். இத்தகைய சிறப்பு வாய்ந்த காயல் துறையும் காலகதியில் தூர்ந்து போயிற்று.