பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

ஊரும் பேரும்

இன்று அவ்வூர் புன்னைக் காயல் என்னும் பேர் கொண்டு, சின்னஞ்சிறிய செம்படவர் ஊராகக் கடற்கரையினின்று மூன்று மைல் உள்ளடங்கியிருக் கின்றது.

பட்டினம்

கடற்கரையில் உண்டாகும் நகரங்கள் பட்டினம் என்று பெயர் பெறும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே தமிழ் நாட்டில் காவிரிப்பூம்பட்டினம் தலைசிறந்த பட்டினமாகத் திகழ்ந்தது. இந்நாளில் பட்டணம் என்னும் சொல் சிறப்பு வகையில் சென்ன பட்டணத்தைக் குறித்தல் போன்று, அந்நாளில் பட்டினம் என்பது காவிரிப் பூம்பட்டினத்தையே குறித்தது. அந்நகரத்தைப் பற்றிப் பண்டைக் கவிஞர் ஒருவர் இயற்றிய பாட்டு பட்டினப் பாலை என்று பெயர் பெற்றது. அப்பட்டினத்தில் வணிகர் குலமணியாய்த் தோன்றிப் பின்பு முற்றும் துறந்து சிறப்புற்ற பெரியார் பட்டினத்தார் என்றே இன்றும் பாராட்டப் படுகின்றார். எனவே, முன்னாளில் பட்டினம் என்று பெயர் பெற்றிருந்தது காவிரிப்பூம் பட்டினமே என்பது இனிது விளங்குவதாகும். காவிரிப் பூம்பட்டினம் பூம்புகார் நகரம் என்றும் புலவர்களாற் புகழ்ந்துரைக்கப்பட்டது. பூம்பட்டினம் எனவும், பூம்புகார் எனவும் அந்நகர்க்கு அமைந்துள்ள பெயர்களை ஆராய்வோமானால், ஓர் அழகிய கடற்கரை நகரமாக அது விளங்கிற் றென்பது புலனாகும்.

அக் காலத்தில் சிறந்திருந்த கடற்கரை நகரங்களின் அமைப்பைப் பண்டை இலக்கியங்கள் ஒருவாறு காட்டுகின்றன. ஒவ்வொரு பெரிய கடற்கரை நகரமும் இரு பாகங்களை யுடையதாய் இருந்தது. அவற்றுள், ஒரு பாகம்