பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

ஊரும் பேரும்

என்னும் பெயருடைய சில ஊர்கள் தமிழ்நாட்டில் உண்டு. கொங்கு நாட்டின் வட வெல்லையாகப் பெரும் பாலை என்னும் இடம் குறிக்கப்படுகிறது. சேலம் நாட்டில் பெரும் பாலை என்பது இன்றும் ஓர் ஊரின் பெயராக வழங்குகின்றது. சிதம்பரத்திற்கு அருகே திருக்கழிப் பாலை என்னும் சிவஸ்தலம் இருந்தது. அதனைத் தேவாரம் பாடிய மூவரும் போற்றியுள்ளார்கள். இடைக் காலத்தில் கொள்ளிட நதியிலே பெருகி வந்த வெள்ளம் அக்கோவிலை அழித்துவிட்டது. பாண்டி நாட்டில் பாலவனத்தம் என்ற ஊர் உண்டு. அதன் பழம் பெயர் பாலைவன நத்தம் என்பது. ஆதியில் பாலை வனமாயிருந்த இடம், குடியிருப்புக் கேற்ற நத்தமாகிப் பின்பு ஊராகி, வளர்ந்தோங்கிய வரலாறு அவ்வூர்ப் பெயரால் அறியப்படுகின்றது. தொண்டை நாட்டு ஊற்றுக் காட்டுக் கோட்டத்தில் பண்டை நாளில் பாலையூர் என்று பெயர் பெற்றிருந்த ஊர் இக் காலத்தில் செங்கற்பட்டு வட்டத்தில் பாலூராக விளங்குகின்றது. திருப்பாலை வனம் என்னும் பதியும் அந்நாட்டில் உண்டு.

நெல்லை நாட்டில் செக்கச் சிவந்த மணற் பாங்கான சில இடங்கள் தேரி என்று பெயர் பெற்றுள்ளன. கோடைக் காற்றால் தேரியின் தோற்றம் மாற்ற மடையும். இடையன் குடித் தேரியும், குதிரை மொழித் தேரியும், சாத்தான் குளத் தேரியும் நூறடிக்கு மேல் இருநூறடி வரை உயர்ந்து அகன்ற மணல் மேடுகளாகும்.

அடிக் குறிப்பு

1. குடபுலம், குணபுலம், தென்புலம் என்பன முறையே சேர சோழ பாண்டியர் நாடுகளைக் குறித்தலைச் சிறுபாணாற்றுப் படையிற் காண்க.