பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

iv

கோடி ஆண்டுவரை அனற்பிழம்பாய்க் கொதிப்புற்றுக் கிடந்தது. பின்னே அது படிப்படியே தணியத் தொடங்கியது. அனல் தணியத் தணிய நிலவகைகள், உயிர் வகைகள் முதலியன தோன்றலாயின. நிலமும் உயிருந் தோன்றியவாறே பிண்டமாய்க் கிடந்திருப்பின், அவை என்றோ பட்டுப் போயிருக்கும். அவை படாமல் வாழ் வடைந்து வருதல் கண்கூடு. காரணம் என்னை? காரணம் பலபடக் கழறலாம். ஈண்டைக்கு ஒன்றைச் சிறப்பாகக் குறித்தல் நலம். அது, நிலமும் உயிரும், ‘ஊரும் பேரும் பெற்றமை என்க. ஊரும் பேரும் உலகை வாழவைக்கும் பெற்றிமையுடையன என்பதை உன்னுக.

இப்பரந்த அழகிய உலகை என்னுள்ளே தொடர்பு படுத்துங் கருவி ஒன்றுள்ளது. அஃது உள்ளம். உள்ளம் ஓர் அகக்கரணம். அது, புலன்கள் வழியே தன் கடனை ஆற்றுகிறது. ஊர் பேர் இல்வழி உள்ளம் என் செய்யும்? அஃது எதனுடன் தொடர்பு கொள்ளும்? எக் கடனை ஆற்றும்? ஊரும் பேரும் இல்லையேல் உள்ளம் உறங்கியே போகும். ஊரும் பேரும் உள்ள நிகழ்ச்சிக்கு இன்றியமையாதன.

வாழ்க்கைக்கு பல துறைகள் தேவை. அவற்றுள் ஆவி போன்றவை ஊரும் பேரும். ஊரும் பேரும் வாழ்க்கையை இயக்கி வளர்ப்பன என்று கூறல் மிகையாகாது. ஊர் பேரால் உலகம் இயங்கல் வெள்ளிடைமலை, ஊர் பேரே உலகம்; வாழ்க்கை; எல்லாம் எல்லாம்.

இன்னோரன்ன சிறப்புக்கள் பல வாய்ந்த ஊரும் பேரும் இந் நூலுக்குத் தலைப்பாய் அமைந்தது. நூலின் பொருண்மையை விளக்கத் தலைப்பொன்றே சாலும். நூலுக்கேற்ற தலைப்பு: தலைப்புக்கேற்ற நூல்.

சில நாடுகளின் ஊரும் பேரும் அடங்கிய ஆராய்ச்சி நூல்கள் வெளி வந்து உலவுகின்றன. அத் தகைய உலாவைத் தமிழ் நாட்டிற் காண்டல் அருமையாயிருந்தது. அவ்வருமையைப் போக்கும் வாய்ப்பு அறிஞர் சேதுப் பிள்ளை அவர்கட்குக்