பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நன்றியுரை

சென்னைப் பல்கலைக் கழகத்தின் சார்பாக நடைபெறுகின்ற ஆராய்ச்சிப் பத்திரிகையில் தமிழகத்தில் வழங்கும் ஊர்ப் பெயர்களை வகை செய்து ஆறாண்டுகளுக்கு முன்னே நான் ஒரு கட்டுரை எழுதினேன். இந் நூலுக்கு அதுவே அடிப்படையாகும்.

‘ஊரும் பேரும் உருப்படுதற்குப் பலபடியாக உதவி புரிந்த நண்பர் பலர். சென்னைப் பூங்கோயிற் பள்ளித் தமிழாசிரியர் திரு. பா. சொக்கலிங்கனாரும், பரலி சு. சண்முக சுந்தரனாரும் கையெழுத்துப்படி செய்து தந்தனர். சென்னைப் பல்கலைக் கழகத்துச் சரித்திரப் பேராசிரியர் திரு. வி. ரா. இராமச்சந்திர தீகூஷிதர் அவர்கள் இதன் வரலாற்றுப்பகுதியைச் சரிபார்த்து உதவினார்கள். தமிழ்ப் பெரியார் திரு. வி. கல்யாணசுந்தர முதலியார் அவர்கள் முகவுரையளித்து அருளினார்கள். சென்னைப் பச்சையப்பன் கல்லூரித் தமிழாசிரியர் வித்வான் சண்முக வேல னாரும், பவுல் கல்லூரித் தமிழாசிரியர் வித்வான் சுந்தரனாரும் அச்சுப் பிழை திருத்தி உதவினர். புரசையன்பர்கள் திரு. பரந்தாமனாரும், ஜானகிராமனும் பெயரகராதியில் ஒரு பகுதியைத் தொகுத்து உதவினர். அச்சு வேலையைக் கண்ணுங்கருத்துமாய்க் கவனித்துதவினர் திரு. பழனியாரும், நகராண்மைக் கல்லூரித் தமிழாசிரியர் வித்வான் திரு. வடிவேலனாரும். இராஜன் அச்சகத்தார் பல வகையான நெருக்கடிக் கிடையே இதனை விரைவில் நன்றாக அச்சிட்டுத் தந்தார்கள். இவ் வன்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை,
30–6–1946.

ரா.பி. சேதுப்பிள்ளை