பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

ஊரும் பேரும்

குழி என்னும் சொல்லும் பள்ளத்தைக் குறிக்கும். கருங்குழி, ஊற்றுக்குழி, அல்லிக்குழி, பள்ளக்குழி, குழித்தலை முதலிய ஊர்கள் தமிழ் நாட்டின் பல பாகங்களில் அமைந்துள்ளன. இன்னும், பள்ளத்தைக் குறிக்கும் தாழ்வு என்னும் சொல் தாவு எனச் சிதைந்து சில ஊர்ப் பெயர்களிலே வழங்குகின்றது. கருங்குழித்தாவு, பணிக்கத் தாவு முதலிய ஊர்ப் பெயர்கள் இதற்குச் சான்றாகும்.

தாளும் அடியும்

பழங்காலத்தில் மரங்களின் அடியில் சில குடியிருப்புகள் தோன்றி, ; நாளடைவில் ஊர்களாயிருக்கின்றன. அவ்வூர்களின் வரலாறு அவற்றின் பெயரால் விளங்கும். திருப்பனந்தாள் என்னும் பழம்பதி பனங்காட்டில் எழுந்த ஊராகத் தெரிகின்றது. சேலம் நாட்டில் முருகந்தாள் என்பது ஓர் ஊரின் பெயர். நெல்லை நாட்டில் ஆலந்தாள், ஈச்சந்தாள், கருவந்தாள் முதலிய ஊர்கள் காணப்படுகின்றன. தாள் என்ற பொருளைத் தரும் அடி என்னும் சொல் மாவடி, ஆலடி, இலவடி, மூங்கிலடி முதலிய ஊர்ப் பெயர்களில் அமைந்துள்ளது.

நத்தம்

ஊர்ப் பொதுவாக அமைந்த இடம் நத்தம் எனப்படும். அத்தகைய இடம் குடியிருப்பாக மாறிய பின்னரும் பழைய பெயர் எளிதாக மறை வதில்லை. நெல்லை நாட்டிலுள்ள கீழ் நத்தம் மேல நத்தம் என்னும் ஊர்களும், மதுரையிலுள்ள பிள்ளையார் நத்தமும், தென் ஆர்க்காட்டிலுள்ள திருப்பணி நத்தமும் செங்கற்பட்டிலுள்ள