பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குடியும் படையும்

75

பெரிய நத்தமும் இதற்குச் சான்றாகும். சேலம் நாட்டு நாமக்கல் வட்டத்தில் வெட்டை வெளியான இடத்தில் ஒரு நத்தம் எழுந்தது. அது பொட்டல் நத்தம் என்று பெயர் பெற்றது. நாளடைவில் அப் பெயர் தேய்ந்து சிதைந்து பொட்டணம் ஆயிற்று. பழைய பொட்டலும் நத்தமும் இப்போது பொட்டணத்தில் அமைந்திருத்தலைக் காண்பது ஒரு புதுமையாகும்.

களம்

இனி, களம் என்ற சொல்லால் குறிக்கப்படும் ஊர்கள் சிலவற்றைக் காண்போம். பொதுவாகக் களம் என்பது சமவெளியான இடத்தைக் குறிக்கும். சிதம்பரத்துக்கு அருகேயுள்ள திருவேட்களம் என்னும் ஊர் தேவாரப் பாடல் பெற்றுள்ளது. ஈசனாரிடம் பாசுபதாஸ்திரம் பெறக்கருதிய அர்ச்சுனன் அவர் அருளைப் பெறுதற்கு நெடுங்காலம் வேட்ட களம் திருவேட்களம் என்று பெயர் பெற்ற தென்பர். அக்களமே இப்பொழுது அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் இருப்பிடமாக அமைந்திருக்கின்றது. சேர நாட்டிலுள்ள திருவஞ்சைக் களம் சேரமான் பெருமாள் காலத்தில் சிறந்ததோர் திருநகராக விளங்கிற்று. அஞ்சைக் களத்தில் அமர்ந்த ஈசனைச் சேரமான் தோழராகிய சுந்தரர் பாடிப் பரவினார். இன்னும், திருநாவுக்கரசரால் பாடப்பெற்ற நெடுங்களம் என்னும் நகரின் சிறப்பினை முன்னரே கண்டோம்.

களம் என்ற சொல்லின் அடியாகப் பிறந்த களத்தூர் என்பதும் ஊர்ப் பெயராகக் காணப்படுகின்றது. புகழேந்திப் புலவர் என்னும் தமிழ்க் கவிஞர் பிறந்த ஊர் களத்துராகும். ஏனைய களத்தூர்களுக்கும் அவர் பிறந்த களத்துருக்கும்